சில்லரை இல்லையா.. இந்தாங்க பேடிஎம் நம்பர்.. டிஜிட்டல் முறைக்கு மாறிய பிச்சைக்காரர்.. ஆசையே இதுதானாம்
டெல்லி: நாட்டில் டிஜிட்டல் முறையிலான பணப்பரிமாற்றம் அதிகரித்துள்ள நிலையில் பிச்சை எடுத்து வீடு, நிலம் வாங்கிய ஒருவர் ஹெலிகாப்டர் வாங்குவதற்காக வித்தியாசமான முறையில் பேடிஎம் பயன்படுத்தி டிஜிட்டல் முறையில் பிச்சை எடுத்து வருகிறார்.
நாட்டில் அனைத்தும் டிஜிட்டல் மயமாகி வருகிறது. தற்போதைய சூழலில் பெரும்பாலான மக்கள் டிஜிட்டல் முறையில் பணபரிவர்த்தனை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் பலர் தங்களின் கைகளில் பணம் எடுத்து செல்வதை குறைத்துள்ளனர்.
இந்த காலமாற்றத்துக்கு ஏற்ப பிச்சைக்காரர்களும் தங்களை மாற்றி வருகின்றனர். அதாவது அவர்களும் டிஜிட்டல் முறையில் பிச்சை எடுக்க துவங்கி உள்ளனர். இதனை உறுதி செய்யும் வகையிலான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
குறைந்து போன வருமானம்
மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் உள்ள சுர்கி சட்டசபை தொகுதிக்குள் வசித்து வருபவர் ஜுன்ஜுன் பாபா. இவர் சாகர் பழைய கலெக்டர் அலுவலகம் அருகே பிச்சை எடுத்து வருகிறார். தற்போது டிஜிட்டல் மயமாகி உள்ளதால் இவருக்கான வருமானம் குறைந்துள்ளது. அதாவது சில்லரை இல்லை எனக்கூறி பொதுமக்கள் அவருக்கு இரவல் வழங்காமல் சென்றுள்ளனர். இதனால் அவர் மாற்று வழியை யோசித்தார்.
பேடிஎம்க்கு மாறிய பிச்சைக்காரர்
அதனடிப்படையில் பேடிஎம் மூலம் அவர் பிச்சை எடுக்க துவங்கியுள்ளார். அதாவது தான் பிச்சை எடுக்கும் பாத்திரத்தை சுற்றி பேடிஎம் எண்ணை அவர் எழுதி வைத்துள்ளார். யாராவது அவரிடம் சில்லரை இல்லை எனக்கூறினால் உடனடியாக பேடிஎம் எண்ணை கொடுத்து அதில் பணம் செலுத்த சொல்லி வருகிறார் இந்த ஜுன்ஜுன் பாபா.
வெளியான வீடியோ
இந்நிலையில் தான் ஜுன்ஜுன் பாபா பேசும் வீடியோ ஒன்று தற்போது இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் தனது பெயரை ஜுன்ஜுன் பாபா என அறிமுகம் செய்து கொள்ளும் அவர், ‛‛எனக்கு சொந்த வீடு உள்ளது. கிணறு, அதிகளவில் நிலம் உள்ளது. இவை அனைத்தும் பிச்சை எடுத்து சம்பாதித்தது தான்.
ஹெலிகாப்டர் வாங்க விருப்பம்
தற்போது நான் ஹெலிகாப்டர் வாங்க ஆசைப்படுகிறேன். இதற்காக இரவல் வாங்கி பணம் சேர்த்து வருகிறேன். என்னிடம் ஐம்பது ஆயிரம் வரை உள்ளது. சமீபகாலமாக சில்லரை இல்லை எனக்கூறி பணம் கொடுக்க மறுக்கின்றனர். இதனால் பேடிஎம் எண் எழுதி வைத்து பிச்சை எடுத்து வருகிறேன். இந்த எண்ணை கூறி இரவல் பெறுகிறேன்'' என்றார்.
கலவையான விமர்சனம்
தற்போது இவர் பேசும் வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதற்கு பலர் பாராட்டி உள்ளனர். காலமாற்றத்துக்கு ஏற்ப அவர் மாறியுள்ளார் என பாராட்டுகின்றனர். அதேநேரத்தில் இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிமாற்ற முறை என்பது எதற்கெல்லாம் பயன்படுத்தப்படுகிறது என சிலர் கூறியுள்ள அதேவேளையில், ஹெலிகாப்டர் வாங்க பிச்சை எடுப்பது எல்லாம் ரொம்ப ஓவர் என சிலர் விமர்சனம் செய்துள்ளனர்.