மத்திய பிரதேச அணையில் மூழ்கிய.. திருச்சி குடும்பம்! அவ்வளவு பெரிய படகு கவிழந்தது எப்படி?
டெல்லி: திருச்சியை சேர்ந்த கார்குழலி, தனது கணவர் வேலை பார்க்கும் மத்திய பிரதேசத்திற்கு குழந்தைகளுடன் சுற்றுலா சென்றிருக்கிறார். அங்கு நடந்த படகு விபத்தில் மொத்த குடும்பமும் பலியாகியிருப்பது சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விபத்துக்கான காரணங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
திருச்சி திருவெறும்பூர் நவல்பட்டு பகுதியை சேர்ந்தவர் கார்குழலி (38). இவரது கணவர் காமராஜ்(38), மத்தியப் பிரதேசத்தில் துப்பாக்கி தொழிற்சாலை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு புவீந்தரன் (11), தமிழ்வேந்தன் (5) என இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.

கடந்த சில நாட்களாகவே அப்பாவை பார்க்க வேண்டும் என்று குழந்தைகள் அடம்பிடித்து வந்திருக்கின்றன. கோடை விடுமுறைக்கு போகலாம் என்று தாய் கார்குழலி சமாதானம் செய்து வந்த நிலையில், விடுமுறையும் தொடங்கியிருக்கிறது. எனவே, குழந்தைகளை அழைத்துக்கொண்டு மத்தியப் பிரதேசம் சென்றிருக்கிறார் கார்குழலி.
இவர்களுடன், காமராஜின் மைத்துனரான திருப்பூர் தாராபுரத்தை சேர்ந்த வேந்தன், அவருடைய மனைவி சவுபாக்கியவதி மற்றும் இவர்களின் மகள் ஒருவர் என 3 பேரும் கார்குழலி உடன் சென்றிருக்கிறார்கள்.
மத்தியப் பிரதேசம் சென்ற இவர்கள், அங்குள்ள ஜபல்பூர் பார்கி அணையை சுற்றிப்பார்க்க காமராஜுடன் சென்றிருக்கிறார்கள். அணையில் படகு சவாரி செய்ய குழந்தைகள் விருப்பப்படவே, டிக்கெட் எடுத்து 8 பேரும் பயணித்திருக்கிறார்கள். படகு அணையின் நடு பகுதிக்கு சென்றிருக்கிறது. அப்போது எதிர்பாராத விதமாக படகில் ஓட்டை விழுந்து தண்ணீர் உள்ளே புகுந்து இருக்கிறது.
இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத பயணிகள் உடனடியாக லைப் ஜாக்கெட்டை தேடியிருக்கிறார்கள். காமராஜும் ஜாக்கெட்களை எடுத்து குழந்தைகளுக்கு கொடுக்க முயற்சித்திருக்கிறார். ஆனால், லைப் ஜாக்கெட்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததால் அதை எடுப்பதில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது. அதற்குள் படகு முழுவதுமாக நீரில் மூழ்க, பயணிகள் தத்தளித்துள்ளனர்.
படகில் மொத்தம் 40 பேர் இருந்திருக்கின்றனர். இதில், 28 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் 9 பேர் சடலங்களாக மீட்கப்பட்டிருக்கின்றனர். இந்த விபத்தில் கார்குழலி அவரது மூத்த மகன் புவீந்தரன், சவுபாக்கியவதி மற்றும் அவரது மகள் என 5 பேர் உயிரிழந்திருப்பதாக போலீசார் தெரிவித்திருக்கின்றனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
காரணம் என்ன?
படகு அணையின் நடு பகுதிக்கு செல்வதற்கு முன்னரே, காற்றின் வேகம் அதிகமாக இருப்பதாக மற்ற படகு ஓட்டுநர்கள் எச்சரித்துள்ளனர். ஆனால், அதை காதில் வாங்காத படகு ஓட்டுநர், மேலும் முன்னேறி சென்றிருக்கிறார். இதுதான் விபத்துக்கான முதல் காரணமாக சொல்லப்படுகிறது. அதேபோல ஆபத்து நேரத்தில் உதவக்கூடிய லைப் ஜாக்கெட்டுகளை மறைத்த வைத்திருந்தது உயிரிழப்பு அதிகரிக்க காரணம் என்று விபத்திலிருந்து தப்பியவர்கள் கூறுகின்றனர்.
காற்று பலமாக வீசியதால் அலைகள் பெரியதாக எழுந்திருக்கின்றன. இது படகை ஒரு பக்கமாக சாய்க்க தொடங்கியிருக்கிறக்கிறது. இதனால் படகு சமநிலை இழந்து நீரில் மூழ்கியிருக்கிறது.
படகை சாய்த்த காற்று
காற்று பலமாக வீசும்போது, நீரின் மேற்பரப்பில் பெரிய அலைகள் உருவாகின்றன. இந்த அலைகள் படகின் பக்கவாட்டில் மோதும்போது, படகின் சமநிலை குலைகிறது. குறிப்பாகப் படகு காற்றின் திசைக்குச் செங்குத்தாக நின்றால், அலைகள் படகை எளிதில் கவிழ்த்துவிடும். படகின் அடிப்பகுதி நீரில் இருந்தாலும், அதன் மேல் பகுதி காற்றில் இருக்கும். ஒரு பெரிய குரூஸ் படகு அல்லது பயணிகள் படகின் பக்கவாட்டுப் பகுதி ஒரு பெரிய பாய்மரம் போலச் செயல்படும். காற்று அதிவேகமாக மோதும்போது, அந்த அழுத்தம் படகை ஒரு பக்கமாகச் சாய்க்கும்.
இப்படி நடக்கும்போது, படகின் ஈர்ப்பு மையம் மாறி, படகு உடனடியாகக் கவிழ்ந்துவிடும். ஜபல்பூர் போன்ற விபத்துகளில் இதுவே முக்கியக் காரணமாக அமைகிறது.
ஒரு நொடி கவனமாக செயல்பட்டிருந்தால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சரியாக பின்பற்றியிருந்தால் இந்த விபத்து நடந்திருக்காது. ஆனால், இப்போது இரண்டு குடும்பத்தை சேர்ந்தவர்கள் உயிருடன் இல்லை.












Click it and Unblock the Notifications