எல்.முருகனை மாநிலங்களவைக்கு அனுப்பும் மத்திய பிரதேசம்... எப்படி இது சாத்தியம்..?
டெல்லி: மத்திய இணை அமைச்சராக எல்.முருகன் பதவியேற்றுள்ள நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து அவர் ராஜ்யசபா உறுப்பினராக தேர்வு செய்யப்படுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தற்போதைய சூழலில் ராஜ்யசபா உறுப்பினராக எல்.முருகன் தமிழகத்திலிருந்து தேர்வு செய்யப்பட வாய்ப்பில்லை.
தமிழகத்தில் காலியாக உள்ள 3 மாநிலங்களவை இடங்களுக்கு இடைத்தேர்தல் வைத்தால் அதில் சட்டமன்ற உறுப்பினர்கள் பலம் அடிப்படையில் திமுக தான் வெற்றிபெறும்.

தாவர் சந்த் கெலாட்
மத்தியப் பிரதேச மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு மத்திய அமைச்சராக இருந்தவர் தாவர் சந்த் கெலாட். இவர் தற்போது கர்நாடக மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் இவர் தனது ராஜ்யசபா உறுப்பினர் பதவியை முறைப்படி ராஜினாமா செய்துவிட்டார். அதை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு ஏற்றுக்கொண்டதால் மத்தியபிரதேசத்தில் மாநிலங்களவை இடம் ஒன்று காலியாக உள்ளது.

காலியிடம்
தாவர் சந்த் கெலாட்டின் ராஜினாமாவால் மத்திய பிரதேசத்தில் காலியாக உள்ள ஒரு மாநிலங்களவை பதவிக்கு எல்.முருகன் தேர்வு செய்யப்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், மத்தியபிரதேசத்தில் தற்போது பாஜக ஆட்சி நடைபெறுவதால் எல்.முருகன் எளிதாக மாநிலங்களவை உறுப்பினராக முடியும் என்பது கவனிக்கத்தக்கது.
Recommended Video

வேறு மாநிலங்கள்
மத்திய அமைச்சராக பொறுப்பேற்றிருப்பதால் விரைந்து மாநிலங்களவை உறுப்பினராக எல்.முருகன் தேர்வாக உள்ளார். இதனிடையே தமிழகத்தை சேர்ந்த முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் மஹாராஷ்டிராவில் இருந்தும், தற்போதைய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆந்திராவில் இருந்தும் மாநிலங்களவை உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் தற்போது எல்.முருகனும் இணைகிறார்.

அதிமுக
தமிழகத்தில் அடுத்தாண்டு நடைபெறும் 6 மாநிலங்களவை பதவிகளுக்கான தேர்தலில் அதிமுக 2 இடங்களும் திமுக 4 இடங்களிலும் வெற்றி பெற முடியும். தமிழகத்தில் இப்போது வரவிருக்கும் 3 மாநிலங்களவை பதவிகளுக்கான தேர்தலில் திமுகவின் கையே ஓங்கும். சட்டமன்ற உறுப்பினர்களின் பலத்தை வைத்து பார்த்தால் எல்.முருகனை அதிமுகவால் ராஜ்யசபா உறுப்பினராக தேர்வு செய்ய இயலாது.












Click it and Unblock the Notifications