மகாராஷ்டிரா தேர்தலில் முறைகேடு? ஆதாரத்தோடு உச்சநீதிமன்றத்தை நாடும் ‛இந்தியா’ கூட்டணி
டெல்லி: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் தேர்தல் நடைமுறையில் முறைகேடு செய்து தான் பாஜக கூட்டணி வெற்றி பெற்றதாக ‛இந்தியா' கூட்டணி கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டி வரும் நிலையில் தங்களிடம் ஆதாரம் உள்ளது. அந்த ஆதாரத்துடன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர ‛இந்தியா' கூட்டணி கட்சியினர் முடிவு செய்துள்ளனர்.
நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. முதல்வராக பாஜகவின் தேவேந்திர பட்னாவிசும், துணை முதல்வராக சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவாரும் பொறுப்பேற்றுள்ளனர்.
மொத்தம் 288 சட்டசபை தொகுதிகள் உள்ள மகாராஷ்டிராவில் ஆட்சியை பிடிக்க 145 தொகுதிகளில் வெல்ல வேண்டும். ஆனால் பாஜக கூட்டணி 233 இடங்களில் வென்றது. இந்த தேர்தலில் ‛மகாயுதி' கூட்டணியில் பாஜக மட்டும் தனித்து 132 இடங்களில் வெற்றி பெற்றது.

அதோடு கூட்டணியில் உள்ள ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா 57 இடங்களிலும், அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி 41 இடங்களிலும் வெற்றி பெற்றது. இந்த கூட்டணி மொத்தம் 233 தொகுதிகளை கைப்பற்றியது. மறுபுறம் காங்கிரஸ் கூட்டணி படுதோல்வியடைந்தது. ‛மகா விகாஸ் அகாடி' பெயரில் கூட்டணி அமைத்து இருந்த காங்கிரஸ் கட்சி 16 இடங்களிலும், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா அணி 20 இடங்களிலும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் அணி 10 இடங்களிலும் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த கூட்டணி வெறும் 46 இடங்களை மட்டுமே கைப்பற்றியது.
இந்த தேர்தல் தோல்விக்கு பிறகு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் தான் மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் தொடர்பாக ‛இந்தியா' கூட்டணி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளது. இதனை சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரசாந்த் ஜெக்தாப் உறுதி செய்துள்ளது.
இந்த பிரசாந்த் ஜெக்தாப் மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் புனேவில் உள்ள ஹடாப்சார் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதாவது வரும் வெள்ளிக்கிழமைக்கும் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
முன்னதாக சரத்பவார் தலைமையில் இந்தியா கூட்டணி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் ஆம்ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், சீனியர் காங்கிரஸ் தலைவரும், வழக்கறிஞருமான அபிசேக் சிங்கி உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்துக்கு பிறகு பிரசாந்த் ஜெக்தாப் கூறுகையில்,,‛‛மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் தேர்தல் நடைமுறைக்கான விதிகள் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துக்காக நிலையான ஆபரேட்டிங் விதிகள் மீறப்பட்டுள்ளது. தேர்தலுக்கு 3 நாட்களுக்கு முன்பு வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கை மற்றும் நீக்கம் நடந்துள்ளது. இதுதொடர்பான தரவுகள் எங்களிடம் உள்ளது. மத்தியில் ஆளும் பாஜகவுக்கு சாதகமாக இத்தகைய செயல்கள் நடந்தன. இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட உள்ளது'' என்றார்.












Click it and Unblock the Notifications