'அரக்கர்கள்': பில்கிஸ் பானு பலாத்கார வழக்கில் தண்டனை பெற்றவருடன் பாஜக தலைவர்கள்.. கொதித்த மொய்த்ரா
டெல்லி: குஜராத்தின் பாஜக எம்பி, எம்எல்ஏ ஆகியோருடன் அரசு விழாவில் பில்கிஸ் பானுவை பாலியல் பலாத்காரம் செய்து தண்டனை பெற்றவர் பங்கேற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த புகைப்படத்தை மேற்கு வங்க எம்பி மஹுவா மொய்த்ரா ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து ஆவேசமாக கருத்து பதிவிட்டுள்ள அவர், இந்த அரக்கர்கள் மீண்டும் சிறையில் இருப்பதையும் சாவி தூக்கி எறியப்படுவதையும் நான் பார்க்க விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.
குஜராத்தில் கோத்ரா கலவரத்தின் போது 2002-ம் ஆண்டு மார்ச் 3-ம் தேதி கலவரத்திற்கு பயந்து தப்பி ஓடிய பில்கிஸ் பானு அவரின் தாயார், மேலும் 3 குடும்ப உறுப்பினர்கள் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர். இது தவிர பில்கிஸ் பானுவுடன் இருந்த 8 பேர் கொலை செய்யப்பட்டனர். 6 பேர் மாயமாகிவிட்டனர். பில்கிஸ் பானு உட்பட 3 பேர் மட்டுமே அதில் உயிர் தப்பினர்.

ஆயுள் தண்டனை
இந்த கொடூர சம்பவத்தின்போது பில்கிஸ் பானு கர்ப்பமாக இருந்தார். 3 மணி நேரம் மயங்கிக்கிடந்த அவர் மயக்கம் தெளிந்து ஆதிவாசிப் பெண்களிடம் ஆடை வாங்கி அணிந்து கொண்டு போலீசிடம் புகார் கொடுத்தார். இந்த வழக்கில் 11 பேருக்கு கடந்த 2018ம் ஆண்டுஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அவர்கள் அனைவரும் 14 ஆண்டுகள் சிறையில் இருந்துவிட்ட நிலையில் நன்னடத்தையை காரணம் காட்டி, குஜராத் அரசு அவர்களை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தே சிறையிலிருந்து விடுவித்தது. மத்திய அரசின் ஒப்புதலோடுதான் இம்முடிவை எடுத்திருப்பதாக அப்போது குஜராத் அரசு தெரிவித்தது. குஜராத் அரசின் இந்த முடிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

விடுவிக்கப்பட்டது எப்படி?
தண்டனை பெற்றவர்களில் ஒருவரான ராதேஷ்யாம் ஷா, 15 ஆண்டுகளாக சிறையில் உள்ளதால், தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய குஜராத் அரசுக்கு உத்தரவிடவேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில், கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் மனுத்தாக்கல் செய்திருந்தார். இம்மனுவை விசாரித்த அஜய் ரஸ்தோகி தலைமையிலான அமர்வு, குஜராத்தில்தான் குற்றம் நடந்துள்ளது. எனவே இவ்வழக்கு விசாரணை முடிந்து தண்டனை அறிவிக்கப்பட்ட பிறகு குற்றவாளிகளின் தண்டனையை குறைப்பது அல்லது முன்கூட்டியே விடுதலை செய்வது என்பது குஜராத் அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது' என்று உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை தொடர்ந்தே, பில்கிஸ் பானு வழக்கிலிருந்து குற்றவாளிகள் தண்டனைக்காலம் முடியும் முன்பே நன்னடத்தையை காரணம் காட்டி விடுவிக்கப்பட்டனர்.

உச்ச நீதிமன்றம்
இவ்விடுதலையை எதிர்த்து பில்கிஸ் பானு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் ஏராளமானோர் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்நிலையில் கடந்த மாதம், தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்ஹா மற்றும் ஜே.பி.பார்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு, அவர்களின் விடுதலைக்கு எதிரான மனுக்களை விரைவில் விசாரிக்க புதிய பெஞ்ச் அமைக்கப்படும் என்று பானோவுக்கு உறுதியளித்தது. இந்நிலையில் இந்த வழக்கை நீதிபதிகள் கே.எம்.ஜோசப் மற்றும் பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய புதிய அமர்வு இன்று விசாரிக்கிறது.

குடிநீர் விழா
இது ஒருபுறம் எனில் குஜராத்தின் பாஜக எம்பி, எம்எல்ஏ ஆகியோருடன் அரசு விழாவில் பில்கிஸ் பானுவை பாலியல் பலாத்காரம் செய்து தண்டனை பெற்றவர் பங்கேற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சனிக்கிழமையன்று, குஜராத் பாஜக எம்பி ஜஸ்வந்த்சிங் ட்விட்டரில் ஒரு அரசு விழா புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார். அதில் குஜராத்தின் தாஹோட் மாவட்டத்தின் லிம்கேடா தாலுகாவில், கடனா அணையில் இருந்து குழாய் மூலம் லிம்கேடா குழும நீர் விநியோகத் திட்டம் 101.89 கோடி மதிப்பீட்டின் கீழ் அமைக்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் லிம்கேடா தாலுகாவின் 43 கிராமங்களும், சிங்வாட் தாலுகாவின் 18 கிராமங்களும், ஜலோத் தாலுகாவின் 3 கிராமங்களும் பயனடையும் என்று கூறியிருந்தார். இந்த புகைப்படத்தில் பில்கிஸ் பானு வன்கொடுமை வழக்கில் தண்டனை பெற்றவரும் பங்கேற்று இருந்தார்.

கேலிக்கூத்து
இந்த புகைப்படம் பெரும் சர்ச்சையாகி உள்ளது. இது பற்றி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மொய்த்ரா எம்பி, "இந்த அரக்கர்கள் மீண்டும் சிறையில் இருப்பதையும் சாவி தூக்கி எறியப்படுவதையும் நான் பார்க்க விரும்புகிறேன். இந்த நீதியின் கேலிக்கூத்தைப் பாராட்டும் இந்த சாத்தானிய அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இந்தியா தனது தார்மீக பயணத்தை மீண்டும் மீட்டெடுக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" இவ்வாறு மொய்த்ரா எம்பி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications