ராஜ்யசபாவில் கண்ணீரோடு விடைபெற்ற மைத்ரேயன்.. சென்னை-கடலூர் புதிய ரயில் பாதைக்காக ஆக்ரோஷமான கேள்வி
Recommended Video
டெல்லி: சென்னை-கடலூர் இடையே கிழக்கு கடற்கரை அகல ரயில் பாதை திட்டத்தினை விரைந்து முடிக்க வலியுறுத்தி எம்பியாக இருந்த மைத்ரேயன் ராஜ்யசபாவில் கடைசியாக ரயில்வே அமைச்சகத்துக்கு கேள்வி எழுப்பினார்.
தமிழகத்தைச் சேர்ந்த எம்பி வி மைத்ரேயன் ராஜ்யசபாவில் ரயில்வே அமைச்சகத்துக்கு அண்மையில் கேள்வி ஒன்றை எழுப்பினார். அப்போது அவர் கூறுகையில், "கடந்த 2008ம் ஆண்டு தமிழகத்தில் கிழக்கு கடற்கரை ரயில்வே லைன் திட்டம் உருவாக்கப்பட்டது. இதற்காக ரயில்வே அமைச்சகம் ரூ.600 கோடி ஒதுக்கியதோடு ஒப்புதலும் அளித்தது. ஆனால் திட்டத்தை செயல்படுத்துவதற்காக குறிப்பிட்ட காலம் முடிந்த பின்னரும் கூட இதுவரை பணிகள் துவங்கப்படவில்லை.
வளர்ந்து வரும் மக்கள் தொகையை சமாளிப்பதற்காகவும், பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்காகவும் கடலூர் முதல் சென்னை வரை விழுப்புரம் காஞ்சிபுரம் மாவட்ட கடற்கரை பகுதிவழியாக புதிய ரயில் பாதை அமைக்க வேண்டியது கட்டாயமாகும்.
கிழக்கு கடற்கரை ரயில்வே திட்டம் மூலம் பெருநகரான சென்னையை மற்ற மாவட்டங்களாக விழுப்புரம், கடலூர், காஞ்சிபுரம் போன்றவற்றை இணைக்க முடியும். எனவே தற்போது உள்ள தொழில்துறை கட்டமைப்புகள், மனித குடியற்றங்கள், போன்றவற்றை கணக்கில் எடுத்துக்கொண்டு எதிர்க்கால வளர்ச்சியை பூர்த்தி செய்யும் வகையிலான தொலைநோக்கு பார்வையுடன் ரயில்வே பாதை அமைக்க வேண்டும்.
சென்னை-மகாபலிபுரம்-புதுச்சேரி-கடலூர் இடையே கிழக்கு கடற்கரை ரயில்வே பாதை அமைக்கும் திட்டத்தில் கடந்த 2014ம் ஆண்டு புதிய மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி புதுச்சேரி கடலூர் இடையே அகல ரயில்பாதை அமைக்க திட்ட மதிப்பீடு 397.51 கோடியாக ஆக மாற்றப்பட்டுள்ளது. எனினும் ரயில்வே அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் படி சாலைகளில் பாலங்கள் மற்றும் சுரங்க பாதைகள் லெவல் கிராசிங்காக மாற்றப்பட்டது. இதன்படி திருத்தியமைக்கப்பட்ட திட்ட மதிப்பீடாக ரூ. 195.86 கோடி என ரயில்வே வாரியத்தின் பரிசீலனைக்காக மாற்றி அனுப்பப்பட்டது.
எனவே முக்கியமான தமிழகத்தின் கடற்கரையோர அகல ரயில் பாதை திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு உடனடியாக விரைவான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன்" இவ்வாறு கூறினார். மைத்ரேயேனின் இந்த கேள்விக்கு ரயில்வே அமைச்சகம் இதுவரை பதில் அளிக்கவில்லை.