இந்தியா ஆதாரங்கள் கொடுத்தால்..மத பிரசாரகர் ஜாகிர் நாயக் நாடு கடத்தல் குறித்து மலேசிய பிரதமர் அன்வர்!
டெல்லி: இந்தியா போதுமான ஆதாரங்களைக் கொடுத்தால் இஸ்லாமிய மத பிரசாரகர் ஜாகிர் நாயக்கை மலேசியாவில் இருந்து நாடு கடத்துவது தொடர்பாக பரிசீலனை செய்வோம்; ஆனால் இந்தியாவுக்கு எதிராக ஜாகிர் நாயக் செயல்படவில்லை என இந்தியா வருகை தந்துள்ள மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். மேலும் ஜம்மு காஷ்மீர் விவகாரம் இந்தியாவில் உள்நாட்டு பிரச்சனை; பதற்றங்கள் தணிந்து அமைதி திரும்ப வேண்டும் என்றும் மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் தெரிவித்தார்.
பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் இந்தியா வருகை தந்தார். 2022-ம் ஆண்டு மலேசியா பிரதமராக அன்வர் இப்ராஹிம் பதவியேற்ற பின்னர் இந்தியாவுக்கு அவர் முதல் முறையாக வருகை தந்தார். டெல்லியில் ஜனாதிபதி திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் உள்ளிட்டோரையும் மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் சந்தித்து பேசினார். பின்னர் இருதரப்பிலும் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.

டெல்லி வருகை தந்த மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், இந்தியா டுடே டிவி சேனலுக்கு சிறப்புப் பேட்டியளித்தார் அந்தப் பேட்டியில் அன்வர் இப்ராஹிம் கூறியதாவது: இந்தியாவைச் சேர்ந்த மத பிரசாரகர் ஜாகிர் நாயக், எந்த ஒரு பிரச்சனையையும் ஏற்படுத்தவில்லை. பாதுகாப்புக்கு ஆபத்தையும் ஏற்படுத்தவில்லை. இருந்த போதும் அவரை நாடு கடத்துவது தொடர்பாக ஆதாரங்களை இந்தியா அளித்தால் உரிய சட்டங்களின் படி பரிசீலனை செய்ய தயாராக உள்ளோம்.
ஜம்மு காஷ்மீர் விவகாரத்தைப் பொறுத்தவரை இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சனை. அதைப் பற்றி நாம் பேசவிரும்பவில்லை. ஆனால் அந்த பிராந்தியத்தில் பதற்றம் தணிந்து அமைதி நிலவ வேண்டும்.
இந்தியாவில் மத சிறுபான்மையினர், இன சிறுபான்மையினர் குறித்து கவலை கொள்கிறது மலேசியா. எங்கள் நாட்டில் சிறுபான்மையினர் நலன் குறித்து இந்தியா கேள்வி எழுப்புவதைப் போலவே இதுவும்.
மலேசியாவில் மியான்மர் ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகள் விவகாரம் பிரச்சனையாகத்தான் உள்ளது. 2,00,000 ரோஹிங்கியா முஸ்லிம்கள், மலேசியாவில் தஞ்சம் புகுந்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு அதிகாரப்பூர்வமாக அகதிகள் அந்தஸ்து தரப்படவில்லை. ஆயிரக்கணக்கான ரோஹிங்கியா முஸ்லிம்கள் சட்டவிரோதமாக மலேசியாவில் தங்கி உள்ளனர். இவ்வாறு மலேசியா பிரதமர் அன்வர் இப்ராஹிம் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications