மோடியிடம் இருந்து வந்த ‛கால்’.. பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர்! மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்பு
டெல்லி: நரேந்திர மோடி மூன்றாவது முறையாக இன்று பதவியேற்கும் நிலையில், இந்த விழாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்க இருக்கிறார்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இருப்பினும், பாஜக தலைமை தாங்கும் என்டிஏ கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்திருக்கிறது. எனவே, ஆதரவு எம்பிக்களின் பட்டியலை கொடுத்து ஆட்சியமைக்க நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் உரிமை கோரினார். குடியரசுத் தலைவரும் ஆட்சியமைக்க அழைப்பு விடுத்துள்ள நிலையில், இன்று மாலை நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்கிறார்.

நேருவுக்கு பின்னர் தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராகும் தலைவர் என்கிற பெருமையுடன் மோடி பதவியேற்கிறார். பிரதமர் பதவிக்கும், என்டிஏ ஆட்சிக்கும் தூண்களாக இருப்பது நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சிகள்தான். இந்த இரண்டு கட்சிகளின் எம்பிக்களை கழித்துவிட்டால் என்டிஏ கூட்டணிக்கு வெறும் 260 எம்பிக்கள்தான் மிஞ்சுவார்கள். ஆட்சியமைக்க 272 தொகுதிகள் தேவை.
எனவே பாஜக இருவரையும் தாங்கு, தாங்கு என்று தாங்குகிறது. என்ன கேட்டாலும் செய்ய தயார் என ஆட்சியை காப்பாற்றிக்கொள்ள பாஜக முன்வந்திருக்கிறது. எனவே இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மத்திய அமைச்சரவையில் மிக முக்கிய இலாக்காக்களை இரண்டு கட்சிகளும் குறி வைத்திருக்கின்றன. அதாவது மத்திய அமைச்சரவையில் ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த இரண்டு எம்பிக்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் கசிந்திருக்கின்றன.
இப்படியாக இன்று நரேந்திர மோடியுடன் 30 அமைச்சர்கள் பதவியேற்கின்றனர். இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்க பல்வேறு அரசியல் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்கிறார். இந்த தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 234 இடங்களை கைப்பற்றியருக்கிறது. தனியாக 99 இடங்களை வெற்றி பெற்றிருக்கிறது. இது கடந்த தேர்தலை காட்டிலும் 2 மடங்கு அதிகமாகும்.
இந்நிலையில் அழைப்பின் பேரில் காங்கிரஸ் தலைவர் பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார். ரஜினிகாந்த்தும் இந்த விழாவில் பங்கேற்க இருப்பதாக தெரிவித்திருக்கிறார். மொத்தமாக இந்த விழாவில் 9000 பேர் வரை பங்கேற்கின்றனர். இரவு 7.15க்கு தொடங்கும் இந்த விழா சுமார் 2 மணி நேரம் வரை நடைபெறுகிறது.
இலங்கை அபதிபர் ரணில் விக்கிரமசிங்கே, மாலத்தீவு அதிபர் மொஹமட் முய்ஸு, சீஷெல்ஸ் துணை ஜனாதிபதி அகமது அஃபிஃப், பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா, மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜக்நாத், நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால் 'பிரசந்தா' மற்றும் பூடான் பிரதமர் ஷேரிங் டோப்கே என ஏழு வெளிநாட்டு தலைவர்களும் முன்வரிசையில் அமர்ந்திருப்பார்கள்.
அதேபோல பதவி பிரமாணம் செய்துக்கொள்ள வேண்டிய அமைச்சர்களுக்கும் முன்வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்த விழாவுக்கு 10 லோகோ பைலட்டுகளும் அழைக்கப்பட்டிருக்கின்றனர். கடந்த 2014ம் ஆண்டு மோடி பதவியேற்பின்போது சார்க் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றிருந்தனர். அதேபோல 2019ம் ஆண்டு பதவியேற்பு விழாவில் பிம்ஸ்டெக் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications