“மோடி + அமித்ஷா கூட்டணிக்கு சவுக்கடி!” சண்டிகர் தேர்தல் தீர்ப்புக்கு.. மல்லிகார்ஜுன கார்கே வரவேற்பு
டெல்லி: சண்டிகர் மேயர் தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி, ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர் வெற்றி பெற்றதாக உச்சநீதிமன்றம் அறிவித்தது. இந்நிலையில், பாஜகவிடமிருந்து ஜனநாயகம் காப்பாற்றப்பட்டிருப்பதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜுன கார்கே கூறியுள்ளார். இந்த தீர்ப்பின் மூலம் மோடி, அமித்ஷா கூட்டணிக்கு சவுக்கடி கொடுக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
சண்டிகர்: பஞ்சாப் மற்றும் ஹரியானாவுக்கு தலைநகரமாக செயல்பட்டு வரும் சண்டிகர் நகராட்சியில் மொத்தம் 35 கவுன்சிலர் இடங்கள் இருக்கின்றன. இதில் பாஜக சார்பில் 14 கவுன்சிலர்களும், அகாலிதளம் சார்பில் 1 கவுன்சிலர் என மொத்தம் 15 கவுன்சிலர்கள் பாஜக பக்கம் இருக்கின்றனர். மற்றொருபுறம் 13 கவுன்சிலர்கள் ஆம் ஆத்மி சார்பிலும், 7 கவுன்சிலர்கள் காங்கிரஸ் சார்பிலும் வெற்றி பெற்றிருக்கிறார்.

கூட்டணி: எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி எனும் பெயரில் காங்கிரஸும், ஆம் ஆத்மியும் இணைந்து போட்டியிட உள்ள நிலையில், இதற்கு முன்னோட்டமாக சண்டிகர் மேயர் தேர்தலில் இணைந்து போட்டியிட காங்கிரஸும், ஆம் ஆத்மியும் முன் வந்தன. இதனால் இயல்பாகவே இந்த கூட்டணிதான் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
தேர்தல்: மேயர் வேட்பாளராக ஆம் ஆத்மி கூட்டணி சார்பாக குல்தீப் குமார் நிறுத்தப்பட்டார். கடந்த 30ம் தேதி திட்டமிட்டபடி தேர்தல் தொடங்கி, வாக்குப்பதிவு திட்டமிட்டபடி நடைபெற்றது. அன்றே வாக்குகளும் எண்ணப்பட்டன. பாஜக சார்பில் மேயர் வேட்பாளராக நிறுத்தப்பட்ட மனோஜ் சோங்கர் 16 வாக்குகளை பெற்றிருந்தார். அதேபோல காங்கிரஸ்+ஆம் ஆத்மி கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட குல்தீப் குமார் 20 வாக்குகள் கிடைத்தன.
ஆனால் அதில், 8 வாக்குகள் செல்லாதவை என்று தேர்தல் அதிகாரி அனில் மாசிஹ் கூறிவிட்டார். எனவே பாஜகவின் மனோஸ் சோங்கர் புதிய மேயராக அறிவிக்கப்பட்டார். இது பெரும் சர்ச்சையாக வெடித்தது.
பாஜக: தேர்தல் அதிகாரி அனில் மாசிஹ், பாஜகவுக்கு சாதகமான நடந்துக்கொண்டதாக கூறி ஆம் ஆத்மி, காங்கிரஸ் குற்றம் சாட்டிய நிலையில், வாக்கு எண்ணிக்கையின் போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியானது. அதில் தேர்தல் அதிகாரி மாசிஹ், குல்தீப் குமாருக்கு பதிவாகியிருந்த வாக்குச்சீட்டில் பேனாவால் எதையோ எழுதியிருந்தார். இதனையடுத்துதான் 8 வாக்குகள் செல்லாது என சொல்லப்பட்டு, பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
உயர்நீதிமன்றம்: இந்த விவகாரம் தொடர்பாக பஞ்சாப்-ஹரியானா உயர்நீதிமன்றத்தில் காங்கிரஸும், ஆம் ஆத்மியும் வழக்கு தொடுத்தன. இந்த வழக்கு அவசர வழக்காக கடந்த 31ம் தேதி விசாரிக்கப்பட்டது, விசாரணையின் இறுதியில், மேயர் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதற்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு தெரிவித்துவிட்டது. இதனால் ஏமாற்றமடைந்த ஆம் ஆத்மி உச்சநீதிமன்ற படியை ஏறியது.
உச்சநீதிமன்றம்: இந்நிலையில் இன்று வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு, தீர்ப்பை வழங்கியது. அதில், "தேர்தல் நடத்தும் அதிகாரி தவறு செய்திருக்கிறார். அவர் மீது சட்ட நடவடிக்கை பாயும். எனவே இந்த தேர்தலில் ஜனநாயகத்தை காப்பாற்ற நீதிமன்றம் உட்சபட்ச அதிகாரத்தை பயன்படுத்தி ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கிறது" என்று தீர்ப்பளித்திருந்து.
சவுக்கடி: இதற்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகர்ஜுன கார்கே வரவேற்பு தெரிவித்திருக்கிறார். அதாவது, "பாஜகவிடமிருந்து ஜனநாயகத்தை உச்சநீதிமன்றம் காப்பாற்றியுள்ளது. சண்டிகர் தேர்தலில் ஜனநாயகத்தை நீதிமன்றம் காப்பாற்றியுள்ளது. மோடி-அமித்ஷாவின் அதிகார வெறிக்கு இந்த தீர்ப்பின் மூலம் சவுக்கடி விழுந்துள்ளது. ஜனநாயகத்தை நசுக்கும் பாஜகவின் முயற்சிக்கு உச்சநீதிமன்றம் தடை போட்டியிருக்கிறது" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications