உண்மையான 'பாசிஸ்ட்' மம்தா தான்.. அவரிடம் தலைமை பண்பு இல்லை.. விளாசி தள்ளும் மார்க்கண்டேய கட்ஜு!
டெல்லி: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிதான் உண்மையான பாசிஸ்ட் என்று உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு தெரிவித்தார்.
294 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்க சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடந்தது. இதில் பதிவான வாக்குகள் கடந்த 2-ம் தேதி எண்ணப்பட்டது.
கேபி முனுசாமி, வைத்திலிங்கம் ராஜினாமா செய்தால்... ராஜ்யசபா எம்பியாகும் சேனாபதி, தங்க தமிழ்ச்செல்வன்?
திரிணாமுல் அசுர வெற்றி
சுமார் 200 இடங்களுக்கும் மேல் பெற்ற மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஹாட்ரிக் வெற்றி பெற்றது. மம்தாவுக்கு கடும் போட்டி அளிக்கும் என்று கருதப்பட்ட பாஜக 77 இடங்கள் பெற்று பரிதாபமாக சரண் அடைந்தது. ஆனால் அதிர்ச்சி அளிக்கும் விதமாக நந்திகிராமம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி பாஜக சுவேந்து அதிகாரியிடம் தோல்வியை தழுவினார்.
வன்முறை மூண்டது
தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கும்போதே நந்திகிராமிலும், மாநிலத்தின் பல பகுதிகளிலும் வன்முறை சம்பவங்கள் நடந்தன. பாஜக தொண்டர்களை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டது. பாஜகவினரின் கடைகள், வீடுகள் தீ வைத்து அடித்து நொறுக்கப்பட்டதாவும், இந்த வன்முறையில் 6 பாஜகவினர் கொல்லப்பட்டனர் எனவும் குற்றம்சாட்டப்பட்டன.
மம்தா மீது கட்ஜு தாக்கு
இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் அரசிடம் மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டுள்ளது. பிரதமர் மோடியும் வன்முறை சம்பவம் குறித்து மாநில கவர்னர் ஜெகதீப் தங்கரிடம் கேட்டறிந்தார். இந்த நிலையில் ''மம்தா பானர்ஜியை பாசிஸ்ட் என்றும் திமிர் பிடித்தவர் எனவும் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு கடுமையாக விமர்சித்துள்ளார்.
மம்தா பாசிஸ்ட்
இது தொடர்பாக மார்க்டேய கட்ஜு டுவிட்டரில் கூறியிருப்பதாவது:- பாஜக பெரும்பாலும் பாசிஸ்ட் கட்சி என கூறப்படும் நிலையில் உண்மையான பாசிஸ்ட் மம்தா பானர்ஜிதான். இது மிகவும் உண்மை. அவரால் விமர்சனத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. மம்தாவை விமர்சிக்கும் எவரும் சிறையில் அடைக்கப்படுவார்கள். .மம்தா குறித்த சில கேலிச் சித்திரங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்ட ஒரே காரணத்திற்காக ஜாதவ்பூர் பல்கலைக்கழக பேராசிரியர் அம்பிகேஷ் மஹாபத்ரா ஜெயிலில் தள்ளப்பட்டார்.மம்தா பானர்ஜி சர்வாதிகாரித்தனம் மிக்க திமிர் பிடித்தவர். அவரிடம் தலைமைத்துவம் எதுவம் இல்லை. வறுமை, வேலையின்மை, சுகாதார சிக்கல் உள்ளிட்ட பிரச்சினைகளை அவரால் தீர்த்து வைக்க முடியாது என்று மார்க்டேய கட்ஜு தெரிவித்தார்.