மணிப்பூர்: அமித்ஷா ஆபரேஷன் தோல்வி.. பிரதமர் மோடி மவுனம் ஏனாம்? காங். கடும் பாய்ச்சல்!
டெல்லி: மணிப்பூரில் அமைதியை ஏற்படுத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மேற்கொண்ட முயற்சிகள் படுதோல்வி அடைந்துவிட்டன; பிரதமர் மோடி இதுவரை தொடர்ந்து மவுனமாக இருப்பது ஏன்? என காங்கிரஸ் தலைவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
மணிப்பூரில் கடந்த ஒன்றரை மாதங்களாக வன்முறை நீடித்து வருகிறது. மைத்தேயி- குக்கி இனக் குழுக்களிடையேயான இந்த மோதல் ஓயாமல் தொடருகிறது. இந்த வன்முறைகளில் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 50,000க்கும் அதிகமானோர் வாழ்விடங்களை இழந்து அகதிகளாகி உள்ளனர்.

மணிப்பூரில் பாதுகாப்பு தரப்பிடம் இருந்து ஆயுதங்களை கொள்ளையடித்து வன்முறைகள் தொடருகின்றன. இந்த வன்முறைகளை முடிவுக்கு கொண்டு வரம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மணிப்பூர் சென்று முகாமிட்டு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டா.ர். அமித்ஷா மணிப்பூருக்கு சென்று திரும்பி 2 வாரங்களாகிவிட்ட நிலையிலும் தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் நிகழ்கின்றன.
இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஜெய்ராம் ரமேஷ், முகுல் வாஸ்னிக் உள்ளிட்டோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் மத்திய அரசையும் அமித்ஷாவையும் கடுமையாக சாடி உள்ளனர். மணிப்பூர் மாநிலம் எதிர்கொண்டிருக்கும் சூழ்நிலையானது பாஜகவின் பிளவுபடுத்துகிற அரசியலால் ஏற்பட்டது. மத்திய, மாநில உளவுத்துறை அமைப்புகளின் படுதோல்வியை வெளிப்படுத்துகிறது என குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனமாக இருப்பதையும் காங்கிரஸ் தலைவர்கள் கண்டித்துள்ளனர். மணிப்பூரின் குரல் பற்றி பிரதமர் மோடி ஏன் பேச மறுக்கிறார்? அமித்ஷாவின் வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டு மணிப்பூரில் வன்முறை தொடருகிறது. அப்படியான நிலையில் பிரதமர் மோடி மணிப்பூர் மாநிலம் சென்று இயல்புநிலையை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
அத்துடன் மணிப்பூர் மாநிலத்துக்கு அனைத்து கட்சிகளின் கூட்டு குழு ஒன்றையும் மத்திய அரசு அனுப்பி வைக்க வேண்டும். மணிப்பூரில் என்ன நடக்கிறது என்பது நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்தப்பட வேண்டும். ஆகையால் அனைத்துக் கட்சி குழு மணிப்பூர் செல்வதற்கு மத்திய அரசும் பிரதமரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications