உச்சத்தில் வன்முறை.. சிக்கி தவிக்கும் 150 தமிழர்கள்.. பற்றி எரியும் மணிப்பூர்.. என்னதான் நடக்கிறது!
டெல்லி: வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் இப்போது மிக மோசமான வன்முறை ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கே உள்ள தமிழர்கள் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் கடந்த சில நாட்களாக வன்முறை ஏற்பட்டுள்ளது. அங்கே மைத்தேயி இன மக்கள் தங்களுக்குப் பழங்குடியின அந்தஸ்து தேவை என்பதை வலியுறுத்தி வருகின்றனர்.
மாநிலத்தில் பெரும்பான்மையாக உள்ள மைத்தேயி இன மக்களுக்குப் பழங்குடியின அந்தஸ்து அளிக்கப்பட்டால் அது தங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்று பழங்குடியினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மணிப்பூர்: இதற்கிடையே கடந்த புதன்கிழமை அனைத்து பழங்குடியினர் மாணவர் அமைப்பினர் மைத்தேயி இன மக்களைப் பழங்குடியினர் பட்டியலில் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து அமைதி ஊர்வலம் நடத்தப்பட்டது. அப்போது எதிர்பாராத விதமாகப் பிரச்சினை ஏற்படவே அந்த அமைதி ஊர்வலத்தில் வன்முறை வெடித்தது. அங்குள்ள கடைகளும் வீடுகளும் எரிக்கப்பட்டு, தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
அமைதி ஊர்வலத்தில் தொடங்கிய வன்முறை பல்வேறு இடங்களுக்கும் வேகமாகப் பரவியது. இதையடுத்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர அங்கே இணையச் சேவை துண்டிக்கப்பட்டு, ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டது. அந்த பகுதிகளில் தமிழர்களும் கணிசமாக இருக்கும் நிலையில், அவர்களும் அங்கே சிக்கியுள்ளனர். வன்முறை தொடர்வதால் எப்படியாவது அங்கிருந்து வெளியேறி தமிழ்நாட்டிற்கு வந்துவிட வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்.

அமைதி திரும்பவில்லை: இருப்பினும், அமைதி இன்னும் திரும்பாததால் பதற்றம் தொடர்ந்தே வருகிறது. இதனிடையே அங்கே சுமார் 150 தமிழர்கள் சிக்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர்களில் பலர் மருத்துவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது. அங்குச் சிக்கியுள்ள தமிழர்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யத் தமிழக அரசு அவர்களை அணுகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், "அங்குச் சிக்கியுள்ளவர்களில் சுமார் 42 பேர் மருத்துவர்கள். இது தவிர மாணவர்கள் மற்றும் வேலைக்காக அங்குச் சென்றவர்கள் என மொத்தம் 150 பேர் வரை அங்கு இருக்கலாம்" என்று அவர் தெரிவித்தார்.
கண்காணிப்பு: இது தொடர்பாகப் புலம்பெயர்ந்த தமிழர்களின் மறுவாழ்வு மற்றும் நலன்புரி ஆணையர் ஜெசிந்தா லாசரஸ் கூறுகையில், "நாங்கள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். மணிப்பூரில் உள்ள தமிழ்ச் சங்கம் ஆக்டிவாக உள்ளது. டாக்டர்கள் சிலர் குடிநீர் பற்றாக்குறையை எதிர்கொண்டனர். இது அங்குள்ள தமிழ்ச் சங்கத்தின் உதவியுடன் உடனடியாக சரி செய்யப்பட்டது" என்றார்.
மியான்மருக்கு அருகில் உள்ள எல்லை நகரமான மோரேயில் கணிசமான அளவுக்குத் தமிழர்கள் வசித்து வருகின்றனர். அங்கே வன்முறை தொடரும் நிலையில், அனைவருக்கும் சரியான நேரத்தில் உதவி கிடைப்பதை உறுதி செய்ய அவர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மணிப்பூரில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ள போதிலும், வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்தே வருவதால் பதற்றமான சூழல் அங்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழர்கள் வீடுகளிலேயே இருக்கும்படியும் வெளியே வர வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அங்கே வேலை செய்யும் தமிழர்களின் உறவினர்கள் அவர்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்றே தொடர்ந்து கவலைப்பட்டு வருகிறார்கள்.
ரொம்ப மோசம்: இது குறித்து மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "மணிப்பூரில் என் சகோதரி இருக்கிறார். அவர் வாடகை வீட்டில் வசித்து வந்தார். வீட்டின் உரிமையாளர் அவரது பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கவில்லை என்பதால் அவர் தனது குழந்தைகளுடன் மருத்துவமனையில் தங்கி இருக்கிறார்.
அங்கே கலவரம் ஆரம்பிக்கும் முன்பு அனைத்தும் நன்றாகத் தான் இருந்தது. கலவரம் ஆரம்பித்த உடன் நிலைமை தலைகீழானது. சாலைகளில் இருந்த அனைத்து வாகனங்களும் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. இதனால் தான் அங்குப் பதற்றமான சூழல் நிலவுகிறது" என்றார்.
அங்கே பெரும்பான்மையாக உள்ள மைத்தேயி சமூக மக்களுக்குப் பழங்குடி அந்தஸ்து வழங்க உள்ளதாகத் தகவல் வெளியான நிலையில், அதற்கு 40% மக்கள்தொகை கொண்ட நாகர்கள் மற்றும் குக்கிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதன் காரணமாகவே பதற்றம் ஏற்பட்டுள்ளது. ராணுவம் களமிறக்கப்பட்ட போதிலும், அங்கே அமைதி இன்னும் திரும்பவில்லை.
இதற்கிடையே தெலங்கானா அரசு அங்குச் சிக்கியுள்ளவர்களை மீட்க விமானம் அனுப்பியுள்ள நிலையில், அதேபோல தமிழ்நாடு அரசு இயக்க வேண்டும் என்ற கோரிக்கையும் அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications