மணிப்பூரில் அரசு அதிகாரிகள் சமூக வலைத்தள குழுக்களில் இருந்து வெளியேற உத்தரவு? காரணம் என்ன?
டெல்லி: மணிப்பூரில் இன அடிப்படையில் அதிகாரிகள் மற்றும் போலீசார் மத்தியில் வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அதிகாரிகளை சமுக வலைத்தள குழுக்களில் இருக்கக் கூடாது என்று மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில் பெரும்பான்மையாக வசிக்கும் மெய்தி இன மக்கள் தங்களை பழங்குடியின பட்டியலில் இணைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்கு அங்கு வசிக்கும் மற்றொரு பழங்குடியின அமைப்பான குக்கி இன மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் வன்முறையாக வெடித்தது. இதனால், மணிப்பூர் கடந்த மூன்று மாதத்திற்கும் மேலாகவே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

அவ்வப்போது ஏற்படும் வன்முறைகளை கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மணிப்பூரில் பெண்கள் ஆடைகள் இன்றி இழுத்து செல்லப்பட்ட சம்பவம் ஒட்டு மொத்த தேசத்தையே அதிரவைத்தது. இந்த சம்பவம் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரிலும் எதிரொலித்தது. மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் வந்து பதிலளிக்க வேண்டும் என வலியுறுத்திய எதிர்க்கட்சிகள், இதே கோரிக்கையை வைத்து கூட்டத்தொடர் முழுவதும் அமளியில் ஈடுபட்டன.
பிரதமர் மோடியை நாடாளுமன்றத்தில் பேச வைப்பதற்காக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானமும் கொண்டு வந்தன. நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான பதிலுரையில் பேசிய பிரதமர் மோடி மணிப்பூரில் விரைவில் இயல்பு நிலை திரும்பும் என்றார். இதற்கிடையே, மணிப்பூர் விவகாரம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றமும் விசாரணையிலும் உள்ளது. இந்த வழக்கில் மணிப்பூரில் நிலவும் தற்போதைய நிலவரம் தொடர்பான ஸ்டேடஸ் ரிப்போர்ட்டை அம்மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
கடந்த 1 ஆம் அம் தேதி தாக்கல் செய்த அறிக்கையில் இடம் பெற்றுள்ள விவரங்கள் வெளியாகியுள்ளது. அதாவது, பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் உள்ளிட்ட குழுக்களில் பிரிவினைவாதம், தேசவிரோதம் மற்றும் வகுப்பு வாதத்தை அதிகரிக்கும் செயல்களில் ஈடுபடுவதாகவும் இதனால், அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையை சேர்ந்தவர்கள் அனைத்து சமூக வலைத்தள குழுக்களில் இருந்தும் வெளியேற வேண்டும் என்று உள்துறை ஆணையர் டி ரஞ்சித் சிங் பெயரில் அறிவுறுத்தல்கள் சென்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மணிப்பூரில் இன அடிப்படையில் அதிகாரிகள் மற்றும் போலீசார் மத்தியில் வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், மாநில அரசு, அதிகாரிகளை சமுக வலைத்தள குழுக்களில் இருக்கக் கூடாது என்று உத்தரவிட்டு இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications