மணிப்பூர் வன்முறை வழக்கு: ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!
டெல்லி: மணிப்பூர் மாநில வன்முறை நிலவரம் தொடர்பாக ஒரு வாரத்தில் விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் குக்கி- மைத்தேயி இனக் குழுக்களிடையேயான மோதல்கள் 2 மாதங்களாக நீடிக்கின்றன. இம்மோதல்களில் 150க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் அகதிகளாக இடம் பெயர்ந்திருக்கின்றனர். மணிப்பூரில் 50,000க்கும் அதிகமான பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் மணிப்பூரில் வன்முறை தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது.

மணிப்பூர் மாநிலத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரில் சென்று முகாமிட்டு வன்முறைகளைத் தடுக்க நடவடிக்கைகள் மேற்கொண்டார். மணிப்பூரில் அமைதி குழு ஒன்றும் உருவாக்கப்பட்டது. இருந்த போதும் வன்முறைகள் கட்டுப்படுத்தப்படவில்லை.
அண்மையில் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மணிப்பூர் மாநிலத்துக்கு சென்று அங்கு பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதேபோல முதல்வர் பைரேன்சிங்கும் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தார். மேலும் முதல்வர் பதவியில் இருந்து பைரேன்சிங் விலக தீர்மானித்ததாகவும் அவரது ஆதரவாளர்கள் எதிர்ப்பால் தமது முடிவில் இருந்து அவர் பின்வாங்கியதாகவும் கூறப்பட்டது.
இதனிடையே மணிப்பூர் பழங்குடிகள் அமைப்பு குக்கி இனக்குழுவுக்கு பாதுகாப்பு அளிக்க கோரியும் மைத்தேயி இனக்குழுவை பழங்குடிகள் பட்டியலில் சேர்க்கும் மணிப்பூர் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராகவும் தாக்கல் செய்த மனுக்கள் மீது
உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற்றது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் நரசிம்ஹா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த வழக்குகளை விசாரித்தனர்.
இந்த வழக்கு விசாரணையின் போது பழங்குடிகள் அமைப்பின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கொலின் கோன்ஸால்வ்ஸ், மணிப்பூரில் நிலைமை படுமோசமாக இருக்கிறது என குறிப்பிட்டார். ஆனால் சொலிசிட்டர் ஜெனரல் குறுக்கிட்டு, மணிப்பூரில் நிலைமை மெல்ல முன்னேற்றம் அடைந்து வருகிறது என்றார். மேலும் மணிப்பூரில் ஊரடங்கு உத்தரவுகள் தளர்த்தப்பட்டும் வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான இந்த பெஞ்ச், மணிப்பூர் மாநில நிலைமை தொடர்பாக ஒருவாரத்தில் மாநில அரசு விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications