மோடி போல வேறு எந்த பிரதமரும்.. இந்தளவுக்கு வெறுப்பு பேச்சை பேசியதே இல்லை.. மன்மோகன் சிங் தாக்கு
டெல்லி: குறிப்பிட்ட சமூகம் மற்றும் எதிர்க்கட்சிகள் குறித்து தொடர்ச்சியாக வெறுக்கத்தக்கப் பேச்சுகளைப் பேசி பிரதமர் அலுவலகத்தின் கண்ணியத்தை நரேந்திர மோடி குறைத்துவிட்டதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சாடியுள்ளார்.
நமது நாட்டில் மொத்தம் ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. அதில் 6 கட்ட தேர்தல் நடந்து முடிந்துவிட்ட நிலையில், கடைசிக் கட்ட தேர்தல் மட்டும் ஜூன் 1ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதனால் பிரச்சாரம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அனைத்து அரசியல் தலைவர்களும் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். நாளை மறுநாள் பஞ்சாப், உபி, பீகார் உள்ளிட்ட 8 மாநிலங்களில் மொத்தம் 57 தொகுதிகளில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது.
மன்மோகன் சிங்: இதற்கிடையே பிரதமர் நரேந்திர மோடி குறித்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சில காட்டமான கருத்துகளைத் தெரிவித்துள்ளார். நரேந்திர மோடியைக் கடுமையாகச் சாடிய மன்மோகன் சிங், ஒரு குறிப்பிட்ட சமூகம் அல்லது எதிர்க்கட்சி குறிவைத்து வெறுக்கத்தக்கப் பேச்சுகளைப் பேசி பிரதமர் அலுவலகத்தின் கண்ணியத்தைப் பிரதமர் மோடி குறைத்துவிட்டதாக மன்மோகன் சிங் குற்றம் சாட்டினார்.
மோடி பேச்சு: முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் ராஜஸ்தானில் நடந்த பிரச்சார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், நாட்டின் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்குப் பங்கிட்டுக் கொடுக்கும் என்று பேசியிருந்தார். மேலும், நாட்டின் வளங்கள் மீது உரிமை இஸ்லாமியர்களுக்கே இருப்பதாக மன்மோகன் சிங் கூறியதாகவும் மோடி குறிப்பிட்டு இருந்தார். அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையிலேயே மன்மோகன் சிங் இந்தக் கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
கடிதம்: நாளை பஞ்சாப் மாநிலத்திற்கு லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அம்மாநில மக்களுக்கு மன்மோகன் சிங் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் பிரதமர் மோடி மக்களை முற்றிலும் பிளவுபடுத்தும் வகையில் மிக மோசமான வெறுப்பு பேச்சுகளைப் பேசி வருவதாக மன்மோகன் சிங் குறிப்பிட்டுள்ளார். 2022ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கப் போவதாகப் பிரதமர் மோடி கூறியதாக மேற்கோள்காட்டிய மன்மோகன் சிங், ஆனால் உண்மையில் கடந்த 10 ஆண்டுகளில் விவசாயிகளின் வருவாயைக் குறைந்தே இருப்பதாகச் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பாக அவர் தனது கடிதத்தில், "இப்போது நமது நாட்டில் விவசாயிகளின் தேசிய சராசரி வருமானம் நாளொன்றுக்கு ரூ. 27ஆக இருக்கிறது. ஆனால், ஒரு விவசாயியின் சராசரி கடன் ரூ. 27,000 ஆக உள்ளது. எரிபொருள் மற்றும் உரங்கள் போன்ற உள்ளீட்டுப் பொருட்கள் விலை அதிகரிப்பு, பல வேளான் உபகரணங்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பு, விவசாய பொருட்கள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி குறித்து மத்திய அரசு எடுத்த விசித்திரமான முடிவுகள் நமது நாட்டின் வேளாண் குடும்பங்களின் சேமிப்பை அழித்து, அவர்களை விளிம்பு நிலைக்கு அழைத்துச் சென்றுவிட்டது" என்று கூறியிருக்கிறார்.
விவசாயிகள் போராட்டங்கள்: விவசாயிகள் போராட்டங்கள் தொடர்பாகவும் மன்மோகன் சிங் பாஜக தலைமையிலான மத்திய அரசைக் கடுமையாகச் சாடினார். இது தொடர்பாக அவர் தனது கடிதத்தில், "டெல்லியில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் 750 விவசாயிகள் உயிரிழந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் பஞ்சாபைச் சேர்ந்தவர்கள் ஆகும்.. அவர்களை நோக்கி போலீசாரின் லத்திகளும் ரப்பர் தோட்டாக்களும் பாய்ந்தது..
இருப்பினும் அவை போதாது என்று நினைத்த பிரதமர் மோடி, நாடாளுமன்றத்திலேயே நமது விவசாயிகள் குறித்து மோசமாகப் பேசினார். அவர்களை 'பர்ஜீவிகள்' (ஒட்டுண்ணிகள்) என்று கூட அழைத்தார். ஆனால், போராடிய விவாயிகளின் ஒரே கோரிக்கை தங்களோடு கலந்தாலோசிக்காமல் தங்கள் மீது திணிக்கப்பட்ட மூன்று விவசாயச் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்பது மட்டுமே..கடந்த பத்து ஆண்டுகளில், பஞ்சாப், பஞ்சாபிகளை பாஜக மிக மோசமாகவே நடத்தியுள்ளது" என்று அதில் கடுமையாகச் சாடியுள்ளார்.












Click it and Unblock the Notifications