மன்மோகன் சிங் மறைவு: 7 நாட்கள் துக்கம் அனுசரிப்பு.. இன்று காலை 11 மணிக்கு கூடுகிறது மத்திய அமைச்சரவை
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு காரணமாக, 7 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.. இன்று காலை 11 மணிக்கு மத்திய அமைச்சரவை கூடி இரங்கல் கூட்டமும் நடைபெற உள்ளது.. மன்மோகன் மறைவுக்கு இறுதிச்சடங்கு, முழு அரசு மரியாதையுடன் நடைபெறும் என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி எஸ்ம்ஸ் மருத்துவ நிர்வாகம் வெளியிட்டிருந்த அறிக்கையின் படி முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நேற்றிரவு 9.50 மணிக்கு காலமானார் என தெரிவிக்கப்பட்டது. இந்தியாவின் பிரதமராக இரு முறை பணியாற்றிய டாக்டர் மன்மோகன் சிங், நாட்டின் பொருளாதார சீர்திருத்தங்களில் முக்கிய பங்காற்றியவர்..

சீக்கிய பிரதமர்: 2004ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை தொடர்ந்து 10 ஆண்டுகளாக நாட்டின் பிரதமராக இருந்தவர் மன்மோகன் சிங். இவர் தான் இந்தியாவின் முதல் சீக்கிய பிரதமர் என்ற பெருமையையும் பெற்றவர்.
இந்தியாவில் அதிக வருடங்கள் பிரதமராகப் பதவி வகித்தவரில், 4வது இடத்தைப் பிடித்தவர். முன்னாள் பிரதமர்கள் ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி மற்றும் தற்போதைய பிரதமர் மோடி ஆகியோர் முறையே முதல் மூன்று இடத்தில் உள்ளனர்.
அரசியல் தலைவர்கள்: டாக்டர் மன்மோகன் சிங் மறைவானது, ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.. பிரதமர் மோடி, தன்னுடைய இரங்கல் செய்தியில், "தங்களின் பெருமைமிகு தலைவர்களில் ஒருவரான மன்மோகன் சிங்கை இழந்ததில் ஒட்டுமொத்த இந்தியாவும் சோகத்தில் ஆழ்ந்திருக்கிறது.
எளிய பின்னணியில் பிறந்து வளர்ந்து மரியாதைமிகு பொருளாதார அறிஞராக உயர்ந்தவர் மன்மோகன் சிங். அரசில் பல பதவிகளையும் வகித்திருக்கிறார். குறிப்பாக, நிதியமைச்சராக இந்தியாவின் பொருளாதார கொள்கைகள் சார்ந்த விஷயத்தில் பல அழிக்க முடியாத தடங்களை பதித்திருக்கிறார். நாடாளுமன்றத்திலும் அவரின் செயல்பாடுகள் ஆழமானதாக இருக்கும்.ஒரு பிரதமராக மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த கடும் முயற்சிகளை எடுத்தார்.
மன்மோகன் சிங்: நான் குஜராத்தின் முதலமைச்சராக இருந்த போது அப்போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங் அவர்களுடன் நிறையவே உரையாடியிருக்கிறேன். அரசு நிர்வாகம் சார்ந்து ஆழ்ந்த ஆலோசனைகளை மேற்கொண்டிருக்கிறோம். எப்போதுமே அவரிடம் ஞானமும் பணிவும் மின்னுவதை பார்க்க முடியும். இந்த நேரத்தில் அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எண்ணிடலங்கா தொண்டர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். ஓம் சாந்தி!' எனப் பதிவிட்டிருக்கிறார்.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் மன்மோகன் சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
7 நாட்கள் துக்கம்: மன்மோகன் சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக 7 நாட்கள் அரசு தரப்பில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. இதனால், இன்று டிசம்பர் 27 தேதி திட்டமிடப்பட்டிருந்த அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுகின்றன. அத்துடன் இன்று காலை 11 மணிக்கு மத்திய அமைச்சரவை கூடி இரங்கல் கூட்டமும் நடைபெற உள்ளது.. மன்மோகன் மறைவுக்கு இறுதிச்சடங்கு, முழு அரசு மரியாதையுடன் நடைபெறும் என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், கர்நாடகாவில் 7 நாட்கள் துக்கம் கடைப்பிடிக்கப்படும். இன்று (27-ம் தேதி) ஒரு நாள் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது என கர்நாடக முதலமைச்சர் அலுவலக செய்தி தெரிவிக்கின்றது.












Click it and Unblock the Notifications