பண்டிகை காலங்களாச்சே.. மேட் இன் இந்தியா பொருட்களை மட்டுமே வாங்குங்க மக்களே.. மோடி வேண்டுகோள்
டெல்லி: பல்வேறு பண்டிகைகள் கால கொண்டாட்டங்கள் நடைபெறும் நிலையில் உள்நாட்டு தயாரிப்பு; உள்ளூர் தயாரிப்புகள்- மேட் இன் இந்தியா பொருட்களை மட்டுமே வாங்கி ஊக்கப்படுத்த வேண்டும் என நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிரதமர் மோடி தமது மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் பேசியதாவது: பண்டிகைகளின் இந்தப் பருவத்தில் நீங்கள் மீண்டும் உங்களுடைய பழைய உறுதிப்பாட்டை மறந்துவிட வேண்டாம். எந்த ஒன்றை நீங்கள் வாங்க நேர்ந்தாலும், அது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருளாக இருக்க வேண்டும், எந்த ஒரு பரிசுப் பொருளை நீங்கள் அளித்தாலும், அது இந்தியாவில் தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.

ஏதோ மண்அகல் விளக்குகளை வாங்குவது மட்டுமே உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுப்பதாக ஆகாது. உங்கள் பகுதியில் தயாரிக்கப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் அதிகபட்ச ஊக்கமளித்து, அதை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். எந்த ஒரு பொருளாக இருந்தாலும், அதை உருவாக்குவதில் இந்திய தொழிலாளி-கைவினைஞரின் வியர்வை சிந்தப்பட்டிருந்தால், பாரத நாட்டுப் பொருள்களால் தயாரிக்கப்பட்டதாக இருந்தால், அது நம்முடைய பெருமிதம், இந்த கௌரவத்தை, இந்தப் பெருமிதத்தை நாம் எப்போதும் கொண்டாடுவோம்.
நண்பர்களே, மனதின் குரலின் இந்தப் பகுதியில் உங்களோடு இணைந்து பயணித்தது மிகவும் சுகமாக இருந்தது. இந்த நிகழ்ச்சியோடு உங்களை இணைத்துக் கொண்டு, உங்களுடைய கருத்துக்கள்-ஆலோசனைகளைக் கண்டிப்பாக அனுப்பி வையுங்கள். உங்களுடைய கடிதங்கள்-கருத்துக்கள்-தகவல்களுக்காக நான் எப்போதும் காத்திருப்பேன். சில நாட்கள் கழித்து பண்டிகைகளின் காலம் தொடங்க இருக்கிறது.
நவராத்திரி தொடங்க இருக்கிறது, அடுத்த இரண்டு மாதங்கள் வரை பூஜைகள்-வழிபாடுகள், விரதங்கள்-பண்டிகைகள், உற்சாகம்-உல்லாசம் என நாலாபுறங்களிலும் இந்தச் சூழல் பரவியிருக்கும். நான் வரவிருக்கும் பண்டிகைகள் அனைத்திற்குமான நல்வாழ்த்துக்களை உங்களனைவருக்கும் தெரிவிக்கிறேன். நீங்களும், உங்கள் குடும்பத்தாரோடு இணைந்து, அனைத்துப் பண்டிகைகளையும் நன்கு கொண்டாடுங்கள், ஆனந்தத்தை அனுபவியுங்கள், மற்றவர்களையும் உங்கள் மகிழ்ச்சியில் கலந்து கொள்ளச் செய்யுங்கள்.
அடுத்த மாதம் மனதின் குரலில் மேலும் புதிய விஷயங்களோடு உங்களை வந்து சந்திக்கிறேன். உங்களனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.












Click it and Unblock the Notifications