மீண்டும் மன் கி பாத் நிகழ்ச்சி... பிரதமர் மோடி உரையாற்றுகிறார்
டெல்லி: மக்களவைத் தேர்தலை ஒட்டி நிறுத்தப்பட்ட மன் கி பாத் எனும் மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி மீண்டும் தொடரப்படவுள்ளதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
இரண்டாவது முறையாக நரேந்திர மோடி, பிரதமராக பதவியேற்ற பின்னர், வரும் 30-ம் தேதி மன் கி பாத் நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 1800-11-7800 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் தங்களது எண்ணங்கள், கருத்துகளை பகிர்ந்து கொள்ளலாம் என கோரப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் மன் கி பாத் நிகழ்ச்சி கடந்த 3 மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், வரும் 30-ம் தேதி காலை 11 மணிக்கு, தான் மீண்டும் மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசவிருப்பதாக பிரதமர் மோடி ட்விட்டரில் அறிவித்துள்ளார்.
130 கோடி இந்தியர்களின் ஒட்டுமொத்த பலத்தைக் கொண்டாடி மகிழ்ச்சியையும், நேர்மறை சிந்தனைகளையும் பகிர்ந்து கொள்ளுமாறு மோடி கோரியுள்ளார். அத்துடன், மக்கள் தன்னிடம் நிறைய சொல்ல வேண்டியிருப்பதால் நமோ ஆப் மூலம் திறந்தவெளி கருத்துப் பதிவு களத்தைப் பயன்படுத்துமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த 2014-ம் ஆண்டு, முதல் முறையாக பொதுமக்களுடன் உரையாடும் 'மன் கி பாத்' என்ற நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடி ஏற்பாடு செய்திருந்தார். இந்தியாவின் பெரும்பான்மையாக 90% மக்களிடம் செல்லும்படியான ஊடகம் வானொலி என்பதால், தொலைக்காட்சியை தவிர்த்து வானொலி வாயிலாக இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்ப முடிவு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அகில இந்திய வானொலி மூலமாக முதல் முறையாக 2014 விஜயதசமியன்று (அக்டோபர் 03) தனது முதல் உரையை பிரதமர் தொடங்கினார். அப்போது முதல் மாதம் ஒரு முறை என கடந்த பிப்ரவரி வரை தொடர்ந்து 53 மன் கி பாத் நிகழ்ச்சிகள் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications