வேலை செய்யாத வென்டிலேட்டர்களும்... பிரமதர் மோடியும் கிட்டதட்ட ஒன்றுதான்... ராகுல் காந்தி அட்டாக்
டெல்லி: காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பிஎம் கேர்ஸ் வென்டிலேட்டர்களையும் பிரதமர் மோடியையும் ஒப்பிட்டு கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா பரவலின் 2ஆம் அலை தற்போது ஏற்பட்டுள்ளது. இதனால் நாட்டிலுள்ள பெரும்பாலான மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பியுள்ளன.
சரியான நேரத்தில் ஆக்சிஜன், வென்டிலேட்டர் உதவிகள் கிடைக்காமல் நோயாளிகள் உயிரிழந்த சம்பவங்களும் நடைபெற்றுள்ளன. கொரோனா 2ஆம் அலையை மத்திய அரசு கையாண்ட விதம் குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளது.

வென்டிலேட்டர்கள் பழுது
நாடு முழுவதும் முதல் அலை ஏற்பட்டபோதே, வென்டிலேட்டர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டிருந்தது. இதனைச் சமாளிக்க பிஎம் கேர்ஸ் நிதியிலிருந்து மருத்துவமனைகளுக்குத் தேவையான வென்டிலேட்டர்களை வாங்க நிதி ஒதுக்கப்பட்டது. இருப்பினும், நாட்டிலுள்ள பல மருத்துவமனைகளிலும் பிஎம் கேர்ஸ் நிதியிலிருந்து வாங்கப்பட்ட வென்டிலேட்டர்கள் தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாகப் பயன்படுத்த முடியாத சூழ்நிலையிலேயே உள்ளதாகக் கூறப்படுகிறது.

ராகுல் சாடல்
இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிஎம் கேர்ஸ் வென்டிலேட்டர்களையும் பிரதமர் மோடியையும் ஒப்பிட்டு விமர்சித்துள்ளார். ராகுல் தனது ட்விட்டரில், "பிஎம் கேர்ஸ் வென்டிலேட்டர்களுக்கும் பிரதமருக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன.
அதிகப்படியான தவறான விளம்பரங்கள்.
தங்கள் வேலைகளைச் செய்யாமல் இருப்பது.
தேவைப்படும் நேரத்தில் இருப்பதில்லை" என விமர்சித்துப் பதிவிட்டுள்ளார். அவரது ட்வீட் தற்போது வைரலாகியுள்ளது.

என்ன பிரச்சினை
பிஎம் கேர்ஸ் நிதியில் வாங்கப்பட்ட வென்டிலேட்டர்கள் பஞ்சாப் மருத்துவமனைகளில் தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாகப் பயன்படுத்தப்படாமல் இருப்பதாகக் கூறப்பட்டது. இதன் அடிப்படையிலேயே ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். இருப்பினும், இந்த குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்துள்ள மத்திய அரசு, இவை ஆதாரமற்ற குற்றச்சாடுகள் என்றும் மருத்துவமனைகள் முறையாக வென்டிலேட்டர்களை இயக்கவில்லை என விளக்கமளித்துள்ளது.

மோடி உத்தரவு
தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ள வென்டிலேட்டர்களை மத்திய அரசுக்கு பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் மற்றும் அக்வா வழங்கியுள்ளன. இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி இந்த வென்டிலேட்டர்களை ஆய்வு செய்யவும், தேவைப்பட்டால், சுகாதாரப் பணியாளர்களுக்கு அதை எப்படி இயக்க வேண்டும் என்பது குறித்து பயிற்சி அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications