சிலை வைக்க செய்த செலவை மாயாவதி சொந்த பணத்தில் தர வேண்டும்.. மாயாவதிக்கு உச்சநீதிமன்றம் குட்டு
Recommended Video
டெல்லி: பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரும், உத்தர பிரதேச முன்னாள் முதல்வருமான மாயாவதி, தன் கட்சி சின்னமான யானை சிலைகளை பெருமளவில் நிறுவிய நிலையில் இதற்காக, அரசுக்கு ஏற்பட்ட இழப்பீட்டை மாயாவதி செலுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
கடந்த, 2008ல், உத்தரபிரதேச மாநில முதல்வராக பதவி வகித்த, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, மாநிலத்தின் பல நகரங்களில் உள்ள பொது இடங்களில், பகுஜன் சமாஜ் கட்சி சின்னமான யானை மற்றும் தன் உருவத்தை சிலைகளாக வடிக்கச் செய்து, நிறுவினார்.
இதற்கு, பல நுாறு கோடி ரூபாய் செலவானது. இதை எதிர்த்து, 2009ல், வழக்கறிஞர் ரவிகாந்த், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இப்போதுதான் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய், நீதிபதிகள், தீபக் குப்தா, சஞ்சீவ் கன்னா அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
ரஞ்சன் கோகோய் கூறுகையில், இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாக இன்னும் காலம் ஆகும். பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர், மாயாவதி, யானை மற்றும் தன் உருவ சிலைகளை பெருமளவில் நிறுவியதால், மாநில அரசுக்கு பெரியளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதை ஈடு செய்ய, சிலைகள் நிறுவியதற்கான செலவு தொகையை, மாயாவதி, அரசுக்கு செலுத்த வேண்டும். இவ்வாறு கூறிய நீதிபதி, வழக்கை ஏப்ரல் 2ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.