குடியரசு தலைவர் உடனான சந்திப்பு மனநிறைவாக இல்லை.. எந்த உறுதியும் சொல்லல.. ஓப்பனாக பேசிய திருமாவளவன்!
டெல்லி: "மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எங்களது கருத்துகளை கேட்ட குடியரசுத் தலைவர் எந்த உறுதியையும் அளிக்கவில்லை. எங்களது கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்ற அளவில் அவரது பதில் இருந்தது குடியரசுத் தலைவருடனான சந்திப்பு மன நிறைவாக இல்லை." என விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மைதேயி, குக்கி சமூக மக்களுக்கு இடையே மிகப்பெரும் வன்முறை வெடித்தது. இந்த நிலையில் வன்முறையாளர்களால் இரு பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்படும் வீடியோ வெளியாகி மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பெண்களை வன்முறையாளர்கள் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின.

மணிப்பூர் வன்முறை விவகாரம் காரணமாக நாடாளுமன்றத்திலும் அமளி ஏற்பட்டது. மணிப்பூர் கொடூரம் குறித்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், மணிப்பூரில் அமைதி திரும்பவும், அங்கு பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கவும் 'இந்தியா' கூட்டணி குழுவினர் 2 நாள் பயணமாக மணிப்பூருக்குச் சென்றனர்.
மணிப்பூரில் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து உரையாடினர். இதைத்தொடர்ந்து, மணிப்பூர் சென்ற எதிர்க்கட்சிகளின் கூட்டணி எம்.பிக்கள் இன்று டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவைச் சந்தித்தனர்.
எதிர்க்கட்சிகளின் கூட்டணி சார்பில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி சரத் பவார், திமுகவின் டி.ஆர் பாலு, திருச்சி சிவா, கனிமொழி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன், ட்கனிமொழி உள்ளிட்டோர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்தனர். மணிப்பூர் விவகாரம் தொடர்பாக விளக்கி, அவரிடம் கோரிக்கை வைத்தனர்.

அதைத் தொடர்ந்து 'இந்தியா' கூட்டணி எம்.பிக்கள் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய விசிக தலைவரும், எம்.பியுமான திருமாவளவன், "மணிப்பூர் மக்களிடம் கோரிக்கைகளை கேட்டு அதை அறிக்கையாக குடியரசுத் தலைவரிடம் அளித்தோம். மணிப்பூர் விவகாரத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து மல்லிகார்ஜுன கார்கே, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் விளக்கினார்.
மணிப்பூருக்கு பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக செல்ல வேண்டும், இரு தரப்பினரையும் சந்தித்து சுமூக செயல்பாட்டுக்கு வழிவகுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தோம். எல்லாவற்றையும் கேட்டுக்கொண்ட குடியரசுத் தலைவர் ஓரிரு வார்த்தைகளில் தன்னுடைய விடையைப் பகர்ந்தார்.

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எங்களது கருத்துகளை பொறுமையாக கேட்ட குடியரசுத் தலைவர் எந்த உறுதியையும் அளிக்கவில்லை. எங்களது கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்ற அளவில் அவரது பதில் இருந்தது. மணிப்பூரில் பெண்களுக்கு நடந்த கொடுமைகள் பற்றி பெண் எம்.பி கூறியவற்றை கேட்ட குடியரசுத்தலைவர் பொறுமையாக தலை அசைத்து விடைபெற்றார். குடியரசுத் தலைவருடனான சந்திப்பு மன நிறைவாக இல்லை." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications