மேகாலயாவில் ரிசார்ட் என்ற பெயரில் விபச்சார விடுதி.. மேகாலயா பாஜக துணை தலைவர் அதிரடியாக கைது
டெல்லி: மேகாலயாவில் விபச்சார விடுதி நடத்திய புகாரில், அம்மாநில போலீசார் அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
மேகாலயாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் அதிரடி ரெய்டு ஒன்றை நடத்தினர். இந்த சோதனையில் போலீசார் கண்டறிந்த விஷயங்கள் அவர்களை மலைத்துப் போக வைத்துவிட்டது.
அம்மாநிலத்தின் துரா பகுதியில் உள்ள ரிசார்ட் ஒன்றில் சோதனை நடத்தினர். அது ரிசார்ட் போலத் தெரிந்தாலும் விபச்சார விடுதியாகவே செயல்பட்டதாக போலீசார் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

விபச்சார விடுதி
இந்த ரிசார்ட் மேகாலயா பாஜக துணைத் தலைவரான பெர்னார்ட் மரக் என்பவருக்குச் சொந்தமானதாகும். அவர் ரிசார்ட் என்ற பெயரில் விபச்சார விடுதியை நடத்தி வருவதாகவும் போலீசார் குற்றஞ்சாட்டினர். மேலும், அவர் மீது கடத்தல் வழக்கைப் பதிவு செய்த போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர். பெர்னார்ட் மரக்குக்கு சொந்தமான ரிசார்டில் நடத்தப்பட்ட ரெய்டில் 47 ஆண்கள், 26 பெண்கள் என மொத்தம் 73 பேரை போலீசார் கைது செய்தனர்.

சிறார்கள் மீட்பு
மேலும் அங்கிருந்து ஆறு மைனர் குழந்தைகளையும் போலீசார் மீட்கப்பட்டனர். அவர்கள் ரிசார்ட்டில் மிகவும் சிறிய அறைகளில் அடைத்து வைக்கப்பட்டு இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். அங்கிருந்து மீட்கப்பட்ட அனைத்து குழந்தைகளும் அதிர்ச்சியில் இருந்ததாகவும் அவர்களால் சரியாகப் பேசக் கூட முடியவில்லை என்றும் போலீசார் தரப்பில் கூறப்பட்டு இருந்தது. இதையடுத்து மைனர் குழந்தைகள் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

கைது
கைது செய்யப்பட்டவர்களை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதனிடையே நேற்றைய தினம் துரா நீதிமன்றம் பெர்னார்ட் மரக்கிற்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்டை பிறப்பித்தது. இதையடுத்து மேகாலயா போலீசார் அவருக்கு லுக்அவுட் நோட்டீஸை பிறப்பித்தனர். இதையடுத்து பெர்னார்ட் மரக் உத்தரப் பிரதேசத்தில் கைது செய்யப்பட்டார். உத்தரப்பிரதேச மாநிலம் ஹபூர் மாவட்டத்தில் வைத்து அவரை மேகாலயா போலீசார் கைது செய்தனர்.

போலீசார்
துரா பகுதியில் இருந்த மக்கள் இந்த ரிசார்ட் குறித்து ஏற்கனவே புகார் அளித்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். மேலும், போலீசார் அங்குச் சோதனைக்குச் சென்ற போது, பலர் மது குடித்துவிட்டும் ஆடையில்லாமல் நிர்வாணமாக இருந்ததாகவும் போலீசார் தரப்பில் கூறப்பட்டு உள்ளது. அங்கிருந்து மொத்தம் 36 வாகனங்கள், 46 மொபைல், பல லிட்டர் மதுமானங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பெர்னார்ட் மரக் ரிசார்ட் என்ற பெயரில் விபச்சார விடுதியையே நடத்தி வந்ததாகவும் குற்றஞ்சாட்டினர்,

மறுப்பு
இருப்பினும் பெர்னார்ட் மரக் தன் மீதான குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்துள்ளார். இது தொடர்பான முன்னதாக அவர் கூறுகையில், "போலீசார் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிப்பேன். மேகாலயா காங்கிரஸ் அரசு எங்களை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாமல் இப்படிப் பழிவாங்கல் நடவடிக்கையில் இறங்கி உள்ளது. அங்கிருந்த அனைவரும் வயது வந்தவர்கள். அவர்கள் பார்டி நடத்துவதை எப்படி விபசாரம் எனக் கூற முடியும்" என்று கூறி இருந்தார்.












Click it and Unblock the Notifications