'காஷ்மீரை கொள்ளையடிக்கவே சட்டப்பிரிவு 370 ரத்து.. எங்கள் அடையாளமே ஆபத்தில் உள்ளது..' மெகபூபா முப்தி
டெல்லி: பல்வேறு விவகாரங்களில் மத்திய அரசைக் கடுமையாகச் சாடியுள்ள காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி, காஷ்மீர் வளங்களைக் கொள்ளையடிக்கவே சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதாகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
காஷ்மீர் மாநிலத்திற்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவை மத்திய அரசு கடந்த 2019ஆம் ஆண்டு ரத்து செய்தது. மேலும், அப்போது காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டது.
அப்போது ஓமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட பல முக்கிய தலைவர்களும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர்.

மெகபூபா முப்தி பேட்டி
இந்நிலையில், சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த சில வாரங்களுக்கு முன் பிரதமருடன் காஷ்மீர் தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். இந்தச் சூழலில் காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசை மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெகபூபா முப்தி கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "காஷ்மீருக்குத் தொடர்பு இல்லாதவர்களுக்கு மட்டுமே முக்கிய பதவிகளை வழங்குகின்றனர்.

கொள்ளை அடிப்பது
சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்யப்பட்டதன் ஒரே நோக்கம் ஜம்மு காஷ்மீர் வளங்களைக் கொள்ளையடிப்பதுதான். எங்கள் தண்ணீரும் மின்சாரமும் வெளியே செல்கின்றன. நாங்கள் தான் இப்போது வரிகளை அதிகம் செலுத்த வேண்டியுள்ளது. இதனால் இங்குள்ள மக்களுக்கு எந்தவித நன்மையும் இல்லை. சொல்லப் போனால் சட்டப்பிரிவு 370 நீக்கம் காஷ்மீர் மக்களுக்கு அதிக பிரச்சினைகளையே அளிக்கிறது.

அடையாளம் ஆபத்தில் உள்ளது
தினசரி அவர்கள் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பிக்கின்றனர். இதனால் எங்கள் அடையாளமே ஆபத்தில் உள்ளது. சட்டப்பிரிவு 370 என்பது காஷ்மீர் மக்களின் அடையாளத்தைக் காக்க மகாராஜா ஹரி சிங் எங்களுக்குத் தந்த பாதுகாப்பு. இந்தியாவுடன் நாங்கள் இருக்க முடிவு செய்தபோது இந்தச் சட்டப்பிரிவு தொடரும் என ஹரி சிங் எங்களுக்கு உறுதி அளித்தார்.

போட்டியிட மாட்டேன்
இது எங்களுக்கு மிகவும் முக்கியமானது. சட்டப்பிரிவு 370ஐ மீண்டும் கொண்டு வரும் வரை நான் நிச்சயம் தேர்தலில் போட்டியிட மாட்டேன். அதேபோல டிலிமிட்டேஷன் நடவடிக்கைகளில் மத்திய அரசு அதீத ஆர்வம் காட்டுகிறது. மற்ற மாநிலங்களில் டிலிமிட்டேஷன் செய்யப்படவில்லை. ஆனால், காஷ்மீருக்கு மட்டும் ஏன் இத்தனை ஆர்வம் காட்டுகின்றனர். இதில் எதோ மர்மம் உள்ளது.

திட்டம் இல்லை
சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டத்திலிருந்து வேலையிழப்பு மாநிலத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. காஷ்மீரை மீண்டும் வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு வர மத்திய அரசிடம் எந்தவொரு திட்டமும் இல்லை. அவ்வளவு ஏன் காஷ்மீர் பண்டிதர்களைக் காக்கக்கூட மத்திய அரசிடம் எந்தவொரு திட்டமும் இல்லை என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும்" என்றும் அவர் விமர்சித்தார்.

அரசு ஊழியர்கள் டிஸ்மிஸ்
பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாகக் கூறி 11 காஷ்மீர் அரசு ஊழியர்கள் நேற்று டிஸ்மிஸ் செய்யப்பட்டனர். இது குறித்து அவர் கூறுகையில், "துறை ரீதியாக எந்தவொரு விசாரணையும் இல்லாமல் அவர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர். இது அரசின் தன்னிச்சையான மற்றும் அநியாயமாக ஒரு முடிவு . தேடப்படும் பயங்கரவாதியான சலாஹுதியனின் மகன்கள் ஷெர்-இ-காஷ்மீர் மருத்துவ அறிவியல் நிறுவனம் மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவில் பணிபுரிந்து வந்தனர். தந்தையின் செயல்களுக்காக மகன்களைத் தண்டிப்பது சரியானது இல்லை. இந்த ஆண்டு மட்டும் 20க்கும் மேற்பட்டோர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனை நாங்கள் தொடர்ந்து எதிர்த்து வருகிறோம்" என்றார். காஷ்மீரின் பல்வேறு அரசியல் கட்சிகளும் இதில் அரசுக்கு விமர்சித்தே கருத்து கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications