"வெளிநாடு செல்ல முடியவில்லை".. மத்திய அமைச்சருக்கு திடீரென கடிதம் எழுதிய மெகபூபா.. காரணம் என்ன?
பாஸ்போர்ட் பிரச்சினை தொடர்பாக ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
டெல்லி: ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி தனது பஸ்போர்ட் புதுப்பிக்கப்படாததால் வெளிநாடு செல்ல முடியாத நிலை இருப்பதாகவும் இந்த விவகாரத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி. அந்த மாநிலத்தின் பிரதான கட்சியான மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவராகவும் இருக்கும் மெகபூபா முப்தி மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சித்து வருபவர்.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட போது அந்த மாநிலத்தின் முக்கிய தலைவர்கள் அனைவரும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். அப்போது வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட முக்கிய அரசியல் தலைவர்களில் மெகபூபா முப்தியும் ஒருவர்.

அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம்
சுமார் 14 மாதங்கள் வீட்டுக்காவலில் மெகபூபா முப்தி வைக்கப்பட்டு இருந்தார். ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து மீண்டும் கொடுக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வரும் மெகபூபா முப்தி அவ்வப்போது மத்தியில் ஆளும் பாஜக அரசையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்த நிலையில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு மெகபூபா முப்தி ஒரு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார்.

நானும் எனது தாயாரும்..
அந்தக் கடிதத்தில், தனது பாஸ்போர்ட் கடந்த 3 ஆண்டுகளாக புதுப்பிக்கப்படவில்லை என்றும் இந்த விவகாரத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக மெகபூபா முப்தி கூறியிருப்பதாவது:- நானும் எனது தாயாரும் கடந்த 2020 ஆம் ஆண்டு பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்காக விண்ணப்பித்து இருந்தோம். ஆனால், எனக்கும் எனது தாயாருக்கும் பாஸ்போர்ட் வழங்குவது தேசிய பாதுகாப்பிற்கு ஊறு விளைவிப்பதாக அமையும் என்று எதிர்மறையான அறிக்கையை ஜம்மு காஷ்மீர் சிஐடி வழங்கியுள்ளது.

3 ஆண்டுகளாக காத்திருக்கிறேன்
தேச பாதுகாப்பு என்ற சாக்கில் ஜம்மு காஷ்மீரில் பத்திரிகையாளர்கள், மாணவர்கள் என பலரது பாஸ்போர்ட் விண்ணப்பங்களும் தன்னிச்சையான போக்குடன் நிராகரிக்கப்படுகிறது. எனது தாயாரை புனித பயணமாக மெக்காவிற்கு அழைத்து செல்ல வேண்டியுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாகவே இதற்காக நான் காத்திருக்கிறேன். அற்பத்தனமான அரசியல் காரணங்களால் எனது தாயாரின் ஒரு சிறிய விருப்பத்தைக் கூட நிறைவேற்ற முடியாமல் போவது ஒரு மகளாக எனக்கு கடும் வேதனையை கொடுக்கிறது. எனவே இந்த பாஸ்போர்ட் விவகாரத்தில் நீங்கள்(ஜெய்சங்கர்) தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று மெகபூபா முப்தி கூறியுள்ளார்.

பாஸ்போர்ட் புதுப்பிக்கக் கோரி
அதேபோல், "தனது மகள் இல்டிஜா மேற்படிப்புக்காக வெளிநாடு செல்ல பாஸ்போர்ட் புதுப்பிக்கக் கோரி கடந்த ஆண்டு ஜூன் மாதம் விண்ணப்பித்தத்தாகவும் அவரது விண்ணப்பமும் இன்னும் இழுபறி நிலையில்தான் உள்ளது. ஸ்ரீநகரில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகம் மீண்டும் தனது கடமையை செய்ய தவறுகிறது" என்றும் ஜெய்சங்கருக்கு எழுதிய கடிதத்தில் மெகபூபா முப்தி வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications