மேகதாது அணை..அண்டை மாநிலத்தை டிகே சிவகுமார் உரசிப் பார்க்கிறார்..துரைமுருகன் கொதிப்பு
டெல்லி: டி.கே சிவக்குமார் துணை முதல்வராக பதவி ஏற்றவுடன் வேறு பணிகளை செய்வார் என நினைத்தோம். ஆனால் அண்டை மாநிலங்களுடன் நட்புறவை பேணுவதாக தெரியவில்லை என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். நாங்கள் மேகதாது அணை கட்ட சம்மதிக்க மாட்டோம் என்றும் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
காவிரியின் குறுக்கே மேகதாது அணைக்கட்டுவது தொடர்பாக கர்நாடக மாநில அரசுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் இடையே நீண்ட காலமாக கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. இந்நிலையில் அண்மையில் கர்நாடகாவில் புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட காங்கிரஸ் அரசு, மூலம் இந்த பிரச்சனைக்கு சுமூக தீர்வு காணப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், கர்நாடகாவின் துணை முதலமைச்சரும், நீர்வளத்துறை அமைச்சருமான டி.கே.சிவக்குமார், "கர்நாடக மாநிலத்தில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள முக்கிய திட்டம், மேகதாது அணை மற்றும் மகதாயி அணை திட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பாக விரைவில் டெல்லி சென்று மத்திய அமைச்சர்களை சந்திப்பேன். விரைவில் அனுமதி பெறுவதற்கான பணிகளை மேற்கொள்வேன்.
மேகதாது அணை கட்டுவது எங்கள் உரிமை. காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது உறுதி. வேறு மாநிலங்களுக்கு துரோகம் செய்யும் எண்ணம் எங்களுக்கு இல்லை என்று தெரிவித்தார். டி.கே.சிவகுமாரின் பேச்சுக்கு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என்றும் அதற்காக 1,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கம் செய்யப்பட்டுள்ளது என்றும் கர்நாடக மாநில நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார் தெரிவித்ததாக இன்று காலை பத்திரிக்கையில் செய்தி வந்துள்ளது. தொடர்ந்து பெரும் போராட்டத்திற்கு பிறகு வெற்றி பெற்றிருக்கும் டிகே சிவகுமாருக்கு நேரில் வாழ்த்து கூறலாம் என்று நினைத்திருந்தேன் இருப்பினும் இந்த அறிக்கையின் மூலம் முதலில் வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன்.
சிவக்குமார் பதவிப் பிரமானம் எடுத்த சில நாட்களுக்குள்ளாகவே அண்டை மாநிலத்தை உரசிப் பார்க்கிற காரியத்தை செய்வது தனக்கு ஆச்சரியமாக இருக்கிறது என்றும் மேகதாது பற்றிய முழு விவரத்தை அதிகாரிகள் இன்னும் அவருக்கு சொல்லியிருக்க மாட்டார்கள் என்று கருதுவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் காவிரிப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புகளில் மேகதாது பற்றி குறிப்பிடப்படவில்லை என்றும் மேகதாதுவோ அல்லது அனுமதிக்கப்படாத கட்டுமானங்களோ தமிழ்நாட்டின் நலனை பாதிக்கும்
எனவே தமிழ்நாட்டிற்கு உரிமையுள்ள கட்டுப்பாடற்ற நீர்பிடிப்புப் பகுதியில் மேகதாதுவில் அணை கட்டுவோம் என்று கூறுவது வரவேற்கத்தக்கதல்ல என்றும் கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட திட்டமிடுவதை தமிழ்நாடு அனைத்து நிலைகளிலும் எதிர்க்கும் என்றும் தெரிவித்துள்ளார். விரைவில் தங்களை நேரில் சந்திக்கின்ற வாய்ப்பு தனக்கு கிடைக்கும் என்றும் அப்போது இந்த பிரச்சினையை பற்றி விரிவாக பேசலாம் என்று கூறியுள்ள அமைச்சர் துரைமுருகன் அதுவரை சிவக்குமார் பொறுமை காப்பார் என நினைக்கிறேன் என்றும் துரைமுருகன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications