பஞ்சாப் சம்பவம்.. நேரடியாக களமிறங்கிய உள்துறை அமைச்சகம்.. பஞ்சாப் போலீசாரிடம் விசாரணை..அடுத்து என்ன
டெல்லி: பஞ்சாபில் பிரதமர் மோடியின் கார் போராட்டக்காரர்களால் மறிக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி அரசுத் திட்டங்களைத் தொடங்கி வைக்கப் பஞ்சாப் மாநிலத்திற்குச் சென்றிருந்தார். அங்குள்ள ஹுசைன்வாலா என்ற பகுதியில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மோசமான வானிலை காரணமாகக் கடைசி நேரத்தில் கார் மூலம் பிரதமர் மோடி நிகழ்ச்சி இடத்திற்குச் செல்ல திட்டமிடப்பட்டது. அப்போது செல்லும் வழியில், மேம்பாலம் ஒன்றில் பிரதமர் மோடியின் காரை போராட்டக்காரர்கள் மறித்தனர்.

பிரதமர் மோடி
இதனால் பிரதமர் மோடியின் கார் முன்னோக்கிச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து அவரை சுற்றிலும் பாதுகாப்பு வீரர்கள் சூழ்ந்தபடி இருந்தனர். சுமார் 20 நிமிட காத்திருப்பிற்குப் பின்னர், வெறு வழியின்றி பிரதமர் மோடியின் கார் திரும்பியது. இந்தச் சம்பவம் இந்தியா- பாகிஸ்தான் எல்லைக்கு வெறும் 30 கிலோமீட்டர் தூரத்தில் நடந்ததால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. கடந்த காலங்களில் இப்பகுதியில் டிரோன் நடமாட்டம் டிபன் பாக்ஸ் வெடிகுண்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விசாரணை
பிரதமரின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் இது மிகப் பெரிய குறைபாடாகப் பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக உள் துறை அமைச்சகம் பஞ்சாப் அரசிடம் அறிக்கை கேட்டுள்ளது. மேலும், உள் துறை அமைச்சகம் சார்பில் பஞ்சாப் போலீசாரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பிரதமர் மோடியின் பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக பதிண்டா காவல் கண்காணிப்பாளர் உட்பட 3 அதிகாரிகளுக்கு ஷோ-காஸ் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

உள் துறை அதிகாரிகள்
பதிண்டா விமானப்படை நிலையத்தில் உள் துறை குழு பதிண்டா மூத்த காவல் கண்காணிப்பாளரிடம் சில கேள்விகளை எழுப்பியது. ஏனென்றால் பிரதமரை அழைத்துச் சென்ற கான்வாயில் பெரும்பாலும் பஞ்சாப் போலீசாரின் வாகனங்கள் பெரும்பாலும் பதிண்டாவில் இருந்து வந்திருந்தன. இதன் காரணமாகவே அவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளது.

போலீசாரிடம் விசாரணை
டெல்லிக்குப் புறப்படுவதற்கு முன், ஃபெரோஸ்பூருக்குச் சென்ற உள்துறை குழு, பிரதமர் மோடியின் வருகையின் போது பணியில் இருந்த பஞ்சாப் டிஜிபி உட்பட அனைத்து அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தியது. ஃபெரோஸ்பூர் கட்டுப்பாட்டு அறையில் விஐபி பணியைக் கண்காணிக்கும் அதிகாரியிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அதேபோல பிரதமர் செல்லும் வழியில் பணியமர்த்தப்பட்ட நான்கு மாவட்ட எஸ்எஸ்பி, டியூட்டி மாஜிஸ்திரேட், துணை கமிஷனர் ஏடிஜிபி, இரண்டு ஐஜிக்கள் மற்றும் ஒரு டிஐஜி என பலரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
Recommended Video

150 பேர் மீது வழக்குப்பதிவு
இந்நிலையில், பிரதமர் காரை மறித்தாக அடையாளம் தெரியாத 150 பேர் மீது ஃபெரோஸ்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். குல்கர்ஹி ஃபெரோஸ்பூர் காவல் நிலையத்தில் 150 போராட்டக்காரர்கள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை செய்யப் பஞ்சாப் அரசு சார்பிலும் சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications