நள்ளிரவில் பகீர்.. இந்தியா- பாக். சர்வதேச எல்லைக்கு அருகே.. விபத்திற்குள்ளான மிக் 29 போர் விமானம்!
டெல்லி: ராஜஸ்தான் மாநிலத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த மிக் 29 போர் விமானம் திடீரென விபத்தில் சிக்கியுள்ளது. இரவு நேரத்தில் நடந்த இந்த விபத்தால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து விமானப் படை விரிவான விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளது. இந்தச் சம்பவத்தால் விபத்து நடந்த பகுதியில் அதிகாரிகள் குவிந்துள்ளனர்.
இந்திய விமானப் படையில் இருக்கும் மிக முக்கியமான மிக் 29 போர் விமானம். சோவியத் கால தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட இந்த விமானம் இன்னுமே இந்திய விமானப் படையில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது.

அதேநேரம் இதில் பல சிக்கல்கள் இருப்பதால் இந்த விமானம் அவ்வப்போது விபத்தில் சிக்கி வருகிறது. அப்படியொரு சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது. இந்திய விமானப்படைக்குச் சொந்தமான மிக் 29 விமானம் இப்போது விபத்தில் சிக்கியுள்ளது.
எங்கே: ராஜஸ்தான் மாநிலத்தில் பார்மர் என்ற பகுதியில் விமானம் பறந்து கொண்டு இருந்த போது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மிக் 29 விமானம் விபத்தில் சிக்கியிருக்கிறது. இருப்பினும், விபத்து ஏற்படுவதற்கு சில நொடிகளுக்கு முன்பு விமானி பாதுகாப்பாக உயிர் தப்பினார். பார்மர் என்ற இந்த பகுதி இந்தியா பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் இருந்து 100 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பார்மர் செக்டரில் உள்ள விமானப்படைத் தளத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது இந்த போர் விமானம் விபத்தில் சிக்கியுள்ளது. ராஜஸ்தானில் பார்மர் பகுதியில் உள்ள உத்தரலை என்ற பகுதிக்கு அருகே மக்கள் நடமாட்டம் இல்லாத வயலில் போர் விமானம் விழுந்து நொறுங்கிய உடனேயே தீப்பிடித்து எரிந்தது.
விமான படை விளக்கம்: மிக் 29 ரக போர் விமானம் விபத்தில் சிக்கியுள்ளதை விமான படை உறுதி செய்துள்ளது. இது தொடர்பாக விமானப்படை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டரில், "பார்மர் செக்டரில் வழக்கமான இரவு பயிற்சியின் போது, மிக் 29 விமானத்தில் ஒரு சிக்கலான தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் விமானி வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பைலட் இப்போது பாதுகாப்பாக இருக்கிறார். இதில் யாருடைய உயிருக்கும் பாதிப்பு இல்லை. எந்தவொரு சொத்துக்கும் பாதிப்பு இல்லை" என கூறப்பட்டுள்ளது.
என்ன நடந்தது: இந்த விபத்திற்கான காரணம் தொழில்நுட்ப கோளாறு என்று மட்டும் கூறப்பட்டுள்ளது. அதைத்தாண்டி விரிவான விளக்கம் தரப்படவில்லை. மேலும், விபத்துக்கான காரணம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக விமானப் படை கூறியுள்ளது.
விபத்து குறித்த தகவல் கிடைத்த உடன் பார்மர் மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் ஜெயின், காவல்துறை கண்காணிப்பாளர் நரேந்திர சிங் மீனா உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர்.












Click it and Unblock the Notifications