"நல்ல திட்டம் தான், ஆனால்.." அக்னிபாத் திட்டம்.. வார்ன் செய்யும் பாதுகாப்பு வல்லுநர்கள்! காரணம் என்ன
டெல்லி: ராணுவத்தில் 4 ஆண்டுகள் மட்டுமே பணிபுரிய அனுமதிக்கும் அக்னிபாத் என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு சில நாட்களுக்கு முன் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.
Recommended Video
இருப்பினும், இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல மாநிலங்களிலும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பல பகுதிகளில் ரயில்களுக்கு தீ வைப்பு சம்பவமும் நடந்துள்ளது.
மத்திய அரசு இந்தத் திட்டம் கண்டிப்பாக வெற்றி பெறும் என நம்பிக்கை வைத்துள்ளது. இருப்பினும், இதுபோன்ற தற்காலிக வீரர்கள் முறை என்பது ராணுவத்தின் நெறிமுறைகள் மற்றும் செயல்பாட்டுத் திறனை மோசமாகப் பாதிக்கும் என்று ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

உயர் அதிகாரிகள்
இது இந்திய ராணுவத்தின் ஒட்டுமொத்தத் தன்மையையும் பாதிக்கும் என்று அவர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர். இத்திட்டத்தைத் திரும்பப்பெறுவதுகுறித்து மத்திய அரசு சீரியஸாக சிந்திக்க வேண்டும் என்று ராணுவ உயர் அதிகாரி ஒரும் தெரிவித்தார். ஏனெனில் ராணுவப் படை என்பது ஜாலியான தற்காலிக வேலை தேடும் 'சாகச முகாம்' இல்லை. இது வாழ்க்கை உயிரிழப்பிற்கும் இடையேயான போர் என்பது அவர்களின் வாதம்.

செலவு குறையும்
இந்த அக்னிபாத் திட்டம் 2020இல் மறைந்த முப்படை தலைமை பிபின் ராவத் தலைமையிலான ராணுவ விவகாரத் துறையால் திட்டமிடப்பட்டது. இந்திய ராணுவத்தை நவீனமயமாக்க வேண்டும் என்பதற்காகச் செலவுகளைக் குறைக்கும் திட்டங்களில் இது முக்கியமானதாகும். கடந்த வாரம் தான் பிரதமர் நரேந்திர மோடிக்கு இத்திட்டம் குறித்து ராணுவ உயர் அதிகாரிகள் விளக்கினர். அக்னிபாத் திட்டத்தில் 4 ஆண்டுகளுக்குப் பிறகு, அதில் இருந்து 25% வீரர்கள் மட்டும் நிரந்தரமாக ராணுவத்தில் சேர்க்கப்படுவார்கள். இதன் மூலம் பென்சன் மற்றும் ஊதியங்கள் பெருமளவு குறைக்கப்படும்.

என்ன காரணம்
பல ஆண்டுகளாகவே ஓய்வூதியங்கள் தான் இந்தியாவின் ஒட்டுமொத்த பாதுகாப்பு பட்ஜெட்டில் ஐந்தில் ஒரு பங்காக உள்ளது. கடந்த 2022-23 நிதியாண்டில், ஓய்வூதியங்கள் ஒட்டுமொத்த பாதுகாப்புச் செலவான ரூ. 525,166 கோடியில் 22.79% அதாவது ரூ. 119,696 கோடியாக இருந்தது. இந்தச் சூழலில் தான் அக்னிபாத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக ராணுவத்தில் ஆள்சேர்ப்பு நிறுத்தப்பட்டு இருந்த நிலையில், அக்னிபாத் திட்டம் அது மீண்டும் தொடங்க காரணமாக இருக்கும்.

ஊதியம்
அக்னிபாத் திட்டத்தில் பணியாற்றுபவர்களில் 25% ராணுவத்திற்குள் வருவார்கள். இருப்பினும், இந்த 4 ஆண்டு காலம் அவர்களின் ஊதியத்தை நிர்ணயம் செய்யும் பணிக் காலமாகக் கருதப்படாது. 4 ஆண்டுகள் உடன் வெளியேறும் 75% பேருக்கு வேறு தொழிலைத் தேர்ந்தெடுக்க உதவி செய்யப்படும். வழக்கமான ஆள் சேர்ப்பு ஒரு புறம் நடைபெறும் தான் என்றாலும் அதில் சேர்க்கப்படும் வீரர்களின் எண்ணிக்கை வரும் காலங்களில் கணிசமாகக் குறைக்கப்படும்.

சிக்கல்
இந்தத் திட்டம் ராணுவத்தின் செலவைக் குறைக்கும் என்றாலும் கூட முன்னாள் வீரர்கள் இதைக் கடுமையாக எதிர்கின்றனர். இது குறித்துப் பாதுகாப்பு வல்லுநர் ராகுல் போன்ஸ்லே கூறுகையில், "உக்ரைன் போரில் ரஷ்யாவின் பின்னடைவை நாம் பார்த்து உள்ளோம். உறுதியான எதிரியை எதிர்த்துப் போராடும் திறன் இல்லாத பகுதி நேர அல்லது போதிய பயிற்சி பெறாத படையைக் கொண்டிருந்தால் இதுபோன்ற ஆபத்து தான் ஏற்படும். அண்டை பாகிஸ்தான் மற்றும் சீனாவின் அச்சுறுத்தல்களைச் சமாளிக்க இந்தியாவுக்கு நல்ல பயிற்சி பெற்ற ராணுவமே தேவை" என்றார்.

பயிற்சி
வழக்கமான ராணுவ வீரர்கள் 2-3 ஆண்டுகள் பயிற்சி பெறுவார்கள். அக்னிபாத் வீரர்கள் 6 மாதங்கள் மட்டுமே பயிற்சி பெறுவார்கள் என்பதால் அதுவும் போதிய பயிற்சி கிடைக்காமல் போகும் வாய்ப்புகள் உள்ளது. அதேபோல ராணுவத்தில் தற்காலிக பிரிவு நிரந்தர பிரிவு என இரண்டு இருப்பது ராணுவம் ஒருங்கிணைந்து செயல்படும் திறனைப் பாதிக்கும் என்றும் அஞ்சப்படுகிறது.

செலவு
எல்லாவற்றையும் தாண்டி ராணுவ செலவைக் குறைக்கவே இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும், இத்திட்டத்தின் மூலம் எவ்வளவு தொகை சேமிக்கப்படும் என்பதைத் தெரிவிக்க முடியாது என்றே வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். பொருளாதார ரீதியாக மிகக் குறைவான பலனே இருக்கும் என்பதே வல்லுநர்களின் கருத்து. எனவே மத்திய அரசு இதில் என்ன முடிவு எடுக்கும் என்பதைப் பொறுத்தே பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications