அமெரிக்காவுடன் தீவிர நெருக்கம் காட்டும் இந்தியா.. காரணம் குவாட் கூட்டணிதான்! ஜெய்சங்கர் விளக்கம்
டெல்லி: சமீப காலங்களாக அமெரிக்காவுடனான உறவில் தீவிரத்தன்மை இருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இந்நிலையில் இந்த விமர்சனங்களுக்கு அமைச்சர் ஜெய்சங்கர் பதிலளித்துள்ளார்.
இந்தியா சுதந்திரமடைந்த காலத்தில், உலக நாடுகள் ஒருபக்கம் அமெரிக்கா சார்பிலும், மறு பக்கம் சோவியத் ரஷ்யா சார்பிலும் இருந்தன. இந்தியாவின் நிலைப்பாடு அணி சேராக்கொள்கைதான். இந்தியாவின் இந்த கொள்கையின் பின்னால் மேலும் சில நாடுகள் அணி திரண்டன. இப்படி இருக்கையில், கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியா இந்த பாதையை விட்டு விலகி, அமெரிக்கா சார்பு நிலையை எடுத்து வருவதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

அதிலும் குறிப்பாக கடந்த 2014க்கு பின்னர், மோடி பிரதமராக பொறுப்பேற்றதற்கு பின்னர் அமெரிக்காவுடனான நெருக்கத்தில் இந்தியா தீவிரம் காட்டி வருவதாக சொல்லப்பட்டது. இதற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதிலளித்துள்ளார்.
"இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் சேர்ந்து இருக்கும் குவாட் அமைப்பு சமீப காலமாக தீவிரமாக வளர்ச்சியடைந்துள்ளதாக செய்தியாளர்கள் கேள்வியெழுப்பியுள்ளீர்கள். இதற்கு காரணம் இந்த நாடுகளின் ஒருங்கிணைப்புதான். ஒரே கருத்தியல் கொண்டதால் நமது உறவுகள் வேகமாக வளர்ந்து வருகிறது. மட்டுமல்லாது குவாட் நாடுகள் பல துருவ வளர்ச்சியை பிரதிபலிக்கிறது. கூட்டு முயற்சியையும், ஜனநாயகத் தன்மையையும் இந்த கூட்டணி உறுதி செய்கிறது. இதை விட முக்கியம், சர்வதேச அரங்கில் இந்தியாவின் கருத்துக்களை பிற நாடுகள் புறக்கணிக்க முடியாத சூழலை குவாட் உருவாக்கியுள்ளது. இதுதான் இந்த கூட்டணியின் பலம்.
கடந்த காலங்களில் இந்திய பெருங்கடல் மற்றும் பசிபிக் பெருங்கடல் இரண்டு வெவ்வேறு நிலைகளாக பார்க்கப்பட்டது. ஆனால் குவாட் அமைப்பு இவை அனைத்தையும் ஒன்று சேர்த்திருக்கிறது. கூட்டு செயல்பாடு குவாட் அமைப்பின் பலம் என்று குறிப்பிட்டிருந்தேன். இதற்கு உதாரணம் கடந்த 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமிதான். அப்போது இந்தியாவும் ஜப்பானும் கடுமையான பாதிப்புக்கு உள்ளானது. இந்த சமயத்தில் இந்த நான்கு நாடுகளும் செய்த கூட்டு வேலைகள் முக்கியமானதாக இருந்தது" என்று கூறியுள்ளார்.
டெல்லியில் ஆண்டுதோறும், ரைசினா உரையாடல் நடைபெறும். கடந்த 2016ம் ஆண்டிலிருந்து இந்த உரையாடல்கள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. தற்போது 9வது ஆண்டு ரைசினா உரையாடல் மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் நாடுகளை சேர்ந்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மற்றும் செயலாளர்கள் பங்கேற்று செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதிலளித்து வருகின்றனர். இதில்தான் ஜெய்சங்கர் அமெரிக்காவுடனான நட்பு குறித்த, மேற்குறிப்பிட்ட கருத்துக்களை தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications