3 வருசமா வெயிட்டிங்.. நிர்மலா சீதாராமனை நேரில் பார்த்ததும் தங்கம் தென்னரசு வைத்த கோரிக்கை!
டெல்லி: சென்னை மெட்ரோ ரயில் 2ஆம் கட்ட திட்டத்திற்கு மத்திய அரசு விரைந்து ஒப்புதல் வழங்க வேண்டும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கோரிக்கை வைத்துள்ளார்.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் கடந்த பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடைபெற்று முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 293 இடங்களைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் நிர்மலா சீதாராமன் மீண்டும் நிதி அமைச்சராக பொறுப்பேற்றார்.

அடுத்த மாதம் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற உள்ள நிலையில் வரும் ஜூலை மாதம் 2024 - 25ஆம் ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். தேர்தலுக்குப் பிறகு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதால் பல முக்கிய அறிவிப்புகள் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சூழலில் மத்திய பட்ஜெட் தொடர்பாக மாநில நிதி அமைச்சர்களுடன் நிர்மலா சீதாராமன் டெல்லியில் இன்று ஆலோசனை நடத்தினார். மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் நிதி அமைச்சர்கள் பட்ஜெட் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர். தமிழக அரசின் சார்பில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்துகொண்டார். அதைத் தொடர்ந்து ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. அப்போது, நிர்மலா சீதாராமனிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளார் தங்கம் தென்னரசு.
பேரிடர் நிவாரண நிதியாக ரூ.37,906 கோடியை தமிழக அரசு கோரி இருந்த நிலையில், மத்திய அரசு மிகக் குறைவாக ரூ.276 கோடி மட்டுமே விடுவித்துள்ளது. இது தமிழ்நாட்டிற்கு இழைக்கப்பட்ட அநீதி. தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேவையான சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு தமிழ்நாடு அரசுக்கு ரூ.3000 கோடியை ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், 2021- 22ஆம் ஆண்டு பட்ஜெட் உரையில் ரூ.63,246 கோடி செலவில் சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணியை அறிவித்தது மத்திய அரசு. இந்த திட்டம், திட்ட முதலீடு வாரியத்தால் பரிந்துரைக்கப்பட்டு இருந்தாலும், பொருளாதார விவகாரங்களுக்கான ஒன்றிய அமைச்சரவை குழுவின் ஒப்புதலுக்காக 3 ஆண்டுகளாக காத்திருக்கிறது. உடனடியாக இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து, புதிய நிதியை ஒதுக்க வேண்டும் என்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் வலியுறுத்தி உள்ளார் தங்கம் தென்னரசு.
மேலும், தாம்பரம் - செங்கல்பட்டு இடையே 4வது இருப்புப் பாதை அமைக்க வேண்டும், பிரதமரின் வீட்டு வசதித் திட்ட பங்களிப்பை அதிகரிக்க வேண்டும், பேரிடர் பாதிப்புகளுக்கு கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications