மிசோரம் வாக்கு எண்ணிக்கை தேதி மாறுமா? தேர்தல் ஆணையத்தை சந்திக்க டெல்லியில் என்ஜிஓ குழு வெயிட்டிங்!
டெல்லி: மிசோரம் மாநில சட்டசபை தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி அம்மாநில என்ஜிஓக்கள் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.
மிசோரம் மாநிலத்தில் மொத்தம் 40 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இம்மாநிலத்தில் பெரும்பான்மைக்கு தேவை 21 இடங்கள். மிசோரம் மாநிலத்தில் அனைத்து இடங்களுக்கும் ஒரே கட்டமாக நவம்பர் 7-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. மிசோரம் தேர்தலில் சுமார் 80% வாக்குகள் பதிவாகி இருந்தன.

மிசோரம் மாநிலத்தில் இம்முறை தொங்கு சட்டசபைதான் ஏற்படும் என்பது பெரும்பாலான கருத்து கணிப்புகளின் முடிவுகள். மிசோரம் மாநில ஆளும் மிசோ தேசிய முன்னணி, ஜோரம் மக்கள் இயக்கம் மற்றும் காங்கிரஸ் ஆகியவை கணிசமான இடங்களைக் கைப்பற்றும். மிசோ தேசிய முன்னணியும் காங்கிரஸும் இணைந்து ஆட்சி அமைக்கலாம்; ஜோரம் மக்கள் இயக்கமும் காங்கிரஸிம் இணைந்து ஆட்சி அமைக்கலாம் என்கிற எதிர்பார்ப்பு உள்ளது. ஆனால் பாஜகவோ நாங்கள்தான் கூட்டணி ஆட்சி அமைப்போம் என நம்பிக்கையோடு இருக்கிறது.
மிசோரம் மாநில சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் டிசம்பர் 3-ந் தேதி எண்ணப்பட உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. மிசோரமில் டிசம்பர் 3-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தக் கூடாது என்பது அம்மாநில மக்களின் கோரிக்கை.
மிசோரம் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் டிசம்பர் 3-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை. மிசோரம் மக்களில் பெரும்பாலானோர் கிறிஸ்தவர்கள். தங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை புனித நாள் என்பதால் டிசம்பர் 3-ந் தேதிக்கு பதில் வேறு ஒருநாளில் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட வேண்டும் என மிசோரம் அரசியல் கட்சிகள், என்ஜிஓ அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.
இருந்த போதும் தேர்தல் ஆணையமோ, டிசம்பர் 3-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்துவிட்டோம்; இதனால் வாக்கு எண்ணிக்கை தேதியை மாற்ற முடியாது என தெரிவித்திருக்கிறது. இந்நிலையில் மிசோரம் மாநில என்ஜிஓக்கள் கூட்டமைப்பு கடந்த 2 நாட்களாக டெல்லியில் முகாமிட்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகளை நேரில் சந்தித்து டிசம்பர் 3-ந் தேதி வாக்கு எண்ணிக்கையை மாற்ற வேண்டும் என வலியுறுத்தி மிசோரம் பிரதிநிதிகள் டெல்லியில் காத்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications