கவிதாவுக்கு ஜாமீன் கிடைக்குமா? மீண்டும் புதிய காரணம் சொல்லி கோர்ட்டில் மனு.. இன்று விசாரணை!
டெல்லி: தெலுங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா ஜாமின் கோரி தாக்கல் செய்த மனு மீது இன்று டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட உள்ளது.
டெல்லி ஆம் ஆத்மி அரசு அமல்படுத்திய புதிய மதுபானக் கொள்கையில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தின. இந்த வழக்கு தொடர்பாக தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் மகளான எம்எல்சி கவிதா மீது அமலாக்கத்துறை பணமோசடி வழக்குப் பதிவு செய்தது.

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக ஹைதராபாத்தில் உள்ள பாரத ராஷ்டிர சமிதி எம்எல்சி கவிதாவின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த மார்ச் 15ஆம் தேதி அதிரடியாக சோதனை நடத்தினர். சோதனையைத் தொடர்ந்து, கேசிஆர் மகள் கவிதாவை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில், கைது செய்யப்பட்ட கவிதா அமலாக்கத்துறை விசாரணைக்காக டெல்லி அழைத்துச் செல்லப்பட்டார். தொடர்ந்து, நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். டெல்லி திகார் சிறையிலேயே கவிதாவிடம் சிபிஐ அதிகாரிகளும் விசாரணை நடத்தினர்.
டெல்லி நீதிமன்றத்தில் தமக்கு இடைக்கால ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார் கவிதா. ஆனால் கவிதாவின் மனுவை டெல்லி நீதிமன்றம் இன்று டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டது. தொடர்ந்து, கவிதாவின் நீதிமன்றக் காவல் ஏப்ரல் 23ஆம் தேதி வடை நீட்டிக்கப்பட்டது.
இதையடுத்து, ஜாமீன் கோரி மீண்டும் வழக்கு தாக்கல் செய்தார் கவிதா. தனக்கு உடல்நலக் குறைவு இருப்பதாகவும், சிறையில் இருந்தால் உடல்நிலை இன்னும் மோசமாகும் என்றும் கவிதா தனது ஜாமீன் மனுவில் கூறியுள்ளார். கவிதா ஜாமின் கோரி தாக்கல் செய்த மனு டெல்லி ரோஸ் அவென்யூ சிபிஐ நீதிமன்றத்தில் இன்று பிற்பகலில் விசாரணைக்கு வர உள்ளது.












Click it and Unblock the Notifications