பிரதமர் மோடி உடன் கமல்ஹாசன் இன்று திடீர் சந்திப்பு.. முக்கிய கோரிக்கை இதுதானாம்!
டெல்லி: டெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசியுள்ளார் மக்கள் நீதி மய்யம் தலைவரும், ராஜ்யசபா எம்.பியுமான கமல்ஹாசன்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், அண்மையில் மாநிலங்களவை எம்.பியாக தேர்வு செய்யப்பட்டார். திமுக ஆதரவுடன் ராஜ்யசபா எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட கமல்ஹாசன், தமிழில் உறுதிமொழி ஏற்று எம்.பியாக பதவியேற்றுக் கொண்டார். அதைத்தொடர்ந்து, நாடாளுமன்றத்திற்குச் சென்று வருகிறார்.

இந்நிலையில், டெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசியுள்ளார் கமல்ஹாசன். இந்தச் சந்திப்பின்போது, பிரதமர் மோடியிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளார் கமல்ஹாசன்.
இதுதொடர்பாக எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள கமல்ஹாசன், "மாண்புமிகு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை மரியாதை நிமித்தமாக இன்று சந்தித்தேன். ஒரு கலைஞனாகவும் தமிழ்நாட்டின் பிரதிநிதியாகவும் அவரிடம் சில கோரிக்கைகளைத் தெரிவித்திருக்கிறேன். அவற்றுள் தலையாயது கீழடி.
தமிழின் தொன்மையை, தமிழ் நாகரிகத்தின் பெருமையை உலகிற்கு உரக்கச் சொல்லும் தமிழர்களின் முன்னெடுப்புகளுக்கு பிரதமர் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்." எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ராஜ்யசபா எம்.பி ஆனது பற்றிப் பேசியிருந்த கமல்ஹாசன், "வெளியில் இருந்து கூர்மையாக எல்லோரும் பார்த்துக் கொண்டிருந்த இடத்தை உள்ளே இருந்து பார்க்கிறேன். அதில் உள்ள கடமை புரிகிறது. பெருமை புரிகிறது. ஆற்ற வேண்டிய கடமைகள் என்ன என்று புரிகிறது. என்னுடைய முனைப்பு முதலில் நாடு, தமிழ்நாடு. இதுவே நாடாளுமன்றத்தில் எனது இலக்கு. இதற்காகத்தான் போய் இருக்கிறேன். இது முக்கியமான பொறுப்பு என்று நான் நினைக்கிறேன். என் கடமையை சரிவர செய்வேன் என நினைக்கிறேன். " எனத் தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications