இனிதான் அதிரடி.. பிஎஸ்என்எல் 'இஸ் பேக்'.. 4ஜியிலும் குதிக்கிறது.. எம்டிஎன்எல்லுடன் இணைப்பு
Recommended Video
டெல்லி: பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (பி.எஸ்.என்.எல்) மற்றும் மகாநகர் தொலைபேசி நிகாம் லிமிடெட் (எம்.டி.என்.எல்) ஆகியவற்றை மத்திய அரசு மூடாது என மத்திய அரசு சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இவற்றிந் மறுசீரமைப்பு திட்டத்திற்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, மத்திய அமைச்சரவை இன்று, ஒப்புதல் அளித்துள்ளது.
தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இன்று அளித்த பேட்டியில், பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் ஆகிய, இரண்டு தொலைத் தொடர்பு நிறுவனங்களும் மூடப்படவோ, அல்லது இவற்றில் மூன்றாம் நபரால் முதலீடு செய்யப்படவோ இல்லை. எந்தவொரு மூன்றாம் தரப்பினருக்கும் இதில் தலையிட அனுமதி வழங்கப்படாது என்று கூறினார்.
பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் மற்றும் மகாநகர் தொலைபேசி நிகாம் லிமிடெட் ஆகிய இரு நிறுவனங்களையும் சீரமைக்க இன்றைய அமைச்சரவை கூட்டத்தில், பேக்கேஜ் நிதி வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

ரூ.14 ஆயிரம் கோடி
இதுகுறித்த, முழு விவரங்கள் இன்னும் வெளியே வரவில்லை, ஆனால் தானாக முன்வந்து ஓய்வூதியம் பெறும் திட்ட (விஆர்எஸ்) செலவுகளைச் சமாளிப்பதற்காக நிதி ரீதியாக சிக்கலில் சிக்கியுள்ள இவ்விரு நிறுவனங்களுக்கும், சுமார் ரூ .14,000 கோடி அளவுக்கான பேக்கேஜை நரேந்திர மோடி அரசு வழங்க ஒப்புக் கொண்டுள்ளது என்று கேபினெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

4ஜி சேவையில் பிஎஸ்என்எல்
விஆர்எஸ், 4 ஜி ஸ்பெக்ட்ரம் பெற்று 4 ஜி சேவையில் களமிறங்குவது போன்ற நிர்வாக செலவீனங்களுக்காக இந்த நிதி பயன்படும். சொத்துக்களை பணமாக்குதல் ஆகியவையும் மறு சீரமைப்பு திட்டத்தில் அடங்கும். நிதி ரீதியாக இவ்விரு நிறுவனங்களை நிலையானதாகவும், போட்டித்தன்மையுடன் இருக்கவும், இந்த பேக்கேஜ் உதவும்.

பணியாளர்கள்
பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் இரண்டிலும், பெரும்பாலான வருவாய், ஊழியர்களுக்கான சம்பளத்திற்கு செல்கிறது. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பணியாளர்கள் 163,000 ஆகவும், எம்டிஎன்எல் நிறுவனம், 22,000 பணியாளர்களையும் கொண்டுள்ளது. இனிமேல் இவ்விரு நிறுவனங்களையும் இணைக்கவும் அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

மக்கள் கோரிக்கை
தனியார் மொபைல் நிறுவனங்கள் தங்கள் ஆதிக்கத்தை நிலை நிறுத்தியபிறகு, தடாலடியாக கட்டண உயர்வுகளை அறிமுகம் செய்தன. இதனால் மக்கள் பிஎஸ்என்எல் வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். டிவிட்டரில் கூட எங்களுக்கு பிஎஸ்என்எல் வேண்டும் என்ற ஹேஷ்டேக் தேசிய அளவில் டிரெண்ட் ஆனது.
|
கடைசி நேர அதிரடி
இந்த நிலையில்தான், நிதியமைச்சகத்தின் அனுமதியை கூட கோராமல் கடைசி நிமிடத்தில், இந்த மறுசீரமைப்பு திட்டத்தை தகவல் தொடர்புத்துறை அமைச்சரவைக்கு கொண்டு வந்துள்ளது. இதுபோன்ற திட்டத்திற்கு நிதியமைச்சகம் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்து வந்தது. பெரும் நிதி சுமை ஏற்படும் என நிதியமைச்சகம் எச்சரித்தது. ஆனால், பிரதமர் மோடி நேரடியாக, இதில் தலையிட்டு, பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்களை மறுசீரமைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டதால், அமைச்சரவை ஒருமனதாக இதற்கு ஒப்புக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications