சொன்னபடி ரூ.15 லட்சம் தாங்க... 10% இடஒதுக்கீடு தேவையே இல்லை.. தம்பிதுரை பொளேர்
Recommended Video

டெல்லி:சொன்னபடி 15 லட்ச ரூபாய் கொடுத்தால் இடஒதுக்கீடு தேவையே இல்லை என்று லோக்சபாவில் துணை சபாநாயகரும், அஇஅதிமுக எம்பியுமான தம்பிதுரை பேசியிருக்கிறார்.
பொருளாதார ரீதியாக உயர் சாதியினர் என்றழைக்கப்படும் நலிந்த பொதுப்பிரிவினருக்கு அரசு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்காக, அரசியல் சட்டத்தில் 124-வது திருத்தம் செய்யும் மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
இந்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, மசோதாவை லோக்சபாவில் மத்திய சமூக நலத்துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட் தாக்கல் செய்தார்.

லோக்சபாவில் பேசிய தம்பிதுரை
இது குறித்த மசோதா மீது லோக்சபாவில் துணை சபாநாயகரும், அஇஅதிமுகவின் எம்பியுமான தம்பிதுரை பேசினார். அவர் பேசியதாவது: பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு மத்திய அரசு இதுவரை செய்தது என்னென்ன? பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு எத்தனையோ திட்டங்கள் இருக்கும்போது, இட ஒதுக்கீடு ஏன் கொண்டு வரப்பட வேண்டும்?

பலனில்லாத நலத்திட்டங்கள்
மத்திய அரசு கொண்டு வந்த திட்டங்களால் பலனில்லை என்ற நிலை நிலவும் போது தான் இடஒதுக்கீடு முதலான திட்டங்கள் கொண்டுவரப்படுவது வழக்கம். மிகுந்த படிப்பாளியான, அறிவாளியான அம்பேத்கர், தலித் என்பதாலேயே அவமதிக்கப்பட்டார். படித்திருந்தும் அவமதிப்புக்கு ஆளாக்கப்படுவதால் தான் அம்பேத்கர் தனி இட ஒதுக்கீடு கோரினார்.

நிலைநாட்டப்படும் நீதி
சாதீயம் எப்போது ஒழிகிறதோ அப்போதுதான் நீதி நிலைநாட்டப்படும். தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோரும் தாழ்த்தப்பட்டோரும் பெரும்பான்மையாக வசித்து வருகின்றனர். பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு என்றால், போலியான வருமானச்சான்றுகளை பயன்படுத்தி முறைகேடுகள் பல நடக்கும். பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கினால், அது முறையானதல்ல.

15 லட்சம் எங்கே?
தேர்தல் பிரச்சாரத்தின் போது ஒவ்வொருவருக்கும் 15 லட்சம் தருவதாகச் சொன்னீர்கள். அதை வழங்கினால், பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு அவசியமே இல்லையே? 10 சதவிகித இட ஒதுக்கீடு மசோதாவில் ஏராளமான குறைகள் உள்ளன.

சாதி வேறுபாடுகள்
சமூகத்தில் பின் தங்கியவர்களுக்காக கொண்டுவரப்பட்டது தான் இட ஒதுக்கீடு. நாட்டிலுள்ள சாதி வேறுபாடுகளை களைவதே மக்களின் முன்னேற்றத்திற்கு நிரந்தர வழி வகுக்கும். மேலும் தமிழகத்தில் உள்ள இட ஒதுக்கீட்டை போல நாடு முழுக்க இட ஒதுக்கீட்டை 69 சதவிகிதமாக உயர்த்த வேண்டும் என்று இடஒதுக்கீடு மசோதா குறித்த விவாதத்தின் போது தம்பிதுரை பேசினார்.












Click it and Unblock the Notifications