கடல் வணிகத்தில்.. தவிர்க்க முடியாத நாடாக உருவெடுக்கும் இந்தியா! ரஷ்யாவுடன் விரைவில் ஒப்பந்தம்
டெல்லி: ஐரோப்பிய நாடுகளிலிருந்து இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு வரும் சரக்கு கப்பல்கள் சூயஸ் கால்வாய் வழியில்தான் வருகின்றன. ஆனால், இது தூரம் அதிகம். இதற்கு மாற்றாக ஆர்டிக் கடல் பகுதியை பயன்படுத்த ஆசிய நாடுகள் திட்டமிட்டிருக்கின்றன. இருப்பினும் ஆர்டிக் கடல் பகுதி, உறைபனியை கொண்ட சவலான பாதை. இந்நிலையில் ஆர்டிக் கடல் பகுதியில் கப்பல்களை இயக்க இந்திய மாலுமிகளுக்கு ரஷ்யா பயிற்சி அளிக்க முன்வந்துள்ளது. இது இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு உதவும்.
ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஆசிய நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே கப்பல் போக்குவரத்தும் அதிகரித்திருக்கிறது. கப்பல் போக்குவரத்தை பொறுத்த அளவில், சீனா மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளிலிருந்து செல்லும் கப்பல்கள் அரபிக்கடலை கடந்து, செங்கடலுக்குள் நுழைந்து, சூயஸ் கால்வாய் வழியாக வெளியேறி கடைசியாக மத்திய தரைக்கடலை கடந்து ஐரோப்பாவை அடைகிறது.

பாரம்பரிய கடல் பாதை
இந்த பயணம் பாரம்பரியமான பாதைதான். இருப்பினும் மத்திய கிழக்கில் பதற்றம் இருப்பதாலும், இந்த பாதையில் டிராபிக் அதிகம் என்பதாலும் இதற்கு மாற்று பாதையை கப்பல் நிறுவனங்கள் தேடி வருகின்றன. ரஷ்யாவிடம் மாற்றுப்பாதை இருக்கிறது. நார்வேயில் தொடங்கி ஆர்டிக் கடல் வழியாக நேர் கோட்டில் வந்தால் ஆசியாவுக்கு வந்துவிடலாம். பயண தூரமும் பல ஆயிரம் கி.மீ குறையும். எனவே செலவும் குறைவு. இந்த கடல் பாதையை ஆங்கிலத்தில் NSR என்று சொல்வார்கள். ஆனால், இந்த கடல் பாதையில் பிரச்சனை இருக்கிறது.
சவாலான கடல் பாதை
ஆர்டிக் கடல், வடதுருவ பகுதிக்கு நெருக்கமாக இருக்கிறது. எனவே, இந்த பாதையில் பனி அதிகம். உறைபனி இருக்கும். இதில் பயணிக்க முன் அனுபவம் தேவை. ரஷ்யா பல ஆண்டுகளாக இந்த பாதையை பயன்படுத்தி வருகிறது. எனவே ரஷ்யாவுக்கு அனுபவம் இருக்கிறது. இந்த அனுபவத்தை பகிர்ந்துக்கொள்ள தயாராக இருக்கிறது. இது குறித்து இந்தியா-ரஷ்யா இடையேயான 23வது உச்சிமாநாட்டில் ஒப்பந்தம் இறுதி செய்ய வாய்ப்புகள் உள்ளன. இந்த மாநாடு அடுத்த மாதம் டெல்லியில் நடைபெற இருக்கிறது.
முன்னதாக கடந்த 18ம் தேதி ரஷ்ய கடற்படை வாரியத் தலைவரும், அதிபர் புதினின் உயர்மட்ட ஆலோசகருமான நிகோலாய் பட்ருஷேவ், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசியிருந்தார். இந்த சந்திப்பு இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தியிருக்கிறது.
ரஷ்யாவுடன் கூட்டு
சமீப காலமாகவே கிழக்கு கடல்சார் வழித்தடம் மற்றும் வடக்கு கடல் வழித்தடம் ஆகியவற்றை மேம்படுத்துவதன் மூலம் வர்த்தகத்தை அதிகரிக்க ரஷ்யா மற்றும் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. துறைமுக உள்கட்டமைப்பு மற்றும் கப்பல் கட்டும் துறைகளில் முதலீடுகள், குறிப்பாக எண்ணெய் கொண்டு செல்லக்கூடிய பனிக்கட்டி உடைப்பு கப்பல்களை உருவாக்குவதில் ஒத்துழைப்பு குறித்தும் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விரைவில் ஒப்பந்தம்
இந்த பேச்சுவார்த்தைகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. டெல்லி மாநாட்டில் இரு நாடுகளுக்கு இடையே ஒப்பந்தம் எட்டப்பட்டால், NSR பாதையில் கப்பல்களை இயக்க இந்திய மாலுமிகளுக்கு ரஷ்யா பயிற்சி கொடுக்கும். NSR கடல் வழித்தடம், ரஷ்யாவின் நார்வே எல்லைக்கு அருகிலுள்ள மர்மான்ஸ்கில் இருந்து ஆர்டிக் பெருங்கடல் வழியாக கிழக்கே அலாஸ்காவுக்கு அருகிலுள்ள பெரிங் ஜலசந்தி வரை சுமார் 5,600 கி.மீ தூரம் நீண்டுள்ளது. இந்த வழித்தடம் சூயஸ் கால்வாய்க்கு ஒரு மாற்று வழி. மட்டுமல்லாது சூயஸ் கால்வாய் வழி பயணத்தை விட 40% குறைவான தூரத்தைக் கொண்டுள்ளது. சூயஸ் வழியாக ஐரோப்பாவுக்கு செல்ல 40 நாட்கள் ஆகும். ஆனால் NSR வழியில் வெறும் 24 நாட்களில் போய்விடலாம்.
எனவே இந்த பாதையை டெவலப் செய்ய ரஷ்யா திட்டமிட்டிருக்கிறது. இதற்காக சீனா, இந்தியாவுடன் அணி சேர விரும்புகிறது. இதில் இந்தியாவுக்கு லாபம்தான். மட்டுமல்லாது NSR கடல் பகுதியில் பயணிக்க தேவையான கப்பல்களை உருவாக்கவும் இந்தியாவின் ஆதரவை ரஷ்யா நாடுகிறது. அதற்காகத்தான் இந்த ஒப்பந்தம் போடப்பட இருக்கிறது.












Click it and Unblock the Notifications