பாஜகவில் இணைந்தால் ED வழக்குகள் கைவிடப்படுமா? வாய்ப்பே இல்லை.. பிரதமர் மோடி சொன்ன நறுக் பதில்
டெல்லி: எதிர்க்கட்சியினர் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்யப்படும்போது, அவர்கள் பாஜகவில் இணைந்துவிட்டால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுகப்படுவதில்லை என்று இந்தியா கூட்டணி தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர். இதற்கு பதிலளித்துள்ள பிரதமர் மோடி, பாஜகவில் இணைந்தவர்கள் மீதான ED வழக்குகள் ரத்தாகவில்லை என்று கூறியுள்ளார்.
அமலாக்கத்துறை, சிபிஐ மற்றும் வருமான வரித்துறை ஆகியவற்றின் நடவடிக்கைகள் சமீப காலமாக கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் மற்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரின் கைதுக்கு பின்னர் அமலாக்கத் துறையின் செயல்பாடுகள் மீதான விமர்சனங்கள் கூர்மையடைய தொடங்கின.

கெஜ்ரிவால் தான் கைது செய்யப்படுவதற்கு முன்னர், “எதிர்க்கட்சி தலைவர்கள் மீது அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை என இந்த மூன்று துறைகளில் ஏதேனும் ஒரு துறையின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தாலும் அவர்கள் மீது விசாரணை நடத்தப்படும். ஆனால் விசாரணையில் சிக்கிய எதிர்க்கட்சி தலைவர்கள் பாஜகவில் இணைந்துவிட்டால், அவர்கள் மீதான வழக்கு கைவிடப்படும், அல்லது கிடப்பில் போடப்படும்” என்று கூறியிருந்தார்.
அதேபோல, "தாவூத் இப்ராகிமையும் சுத்தம் செய்யும் வாஷிங் மெஷின் பாஜகவிடம் உள்ளது" என்று காங்கிரஸ் தலைவர்கள் கடுமையாக விமர்சித்திருந்தனர். இப்படி இருக்கையில் 'இந்தியன் எகஸ்பிரஸில்' அமலாக்கத்துறை வழக்குகள் விவரம் ஒன்று வெளியாகியிருந்தது. அதில், கடந்த 2014 தொடங்கி 2022 வரை அமலாக்கத் துறையால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட அரசியல் தலைவர்களில் 95% பேர் எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
குறிப்பாக அசாம் முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா, மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் அசோக் சவான், என்சிபி தலைவர் பிரபுல் படேல், சிவசேனாவின் பிரதாப் சர்நாயக், பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்கின் மகன் ரனிந்தர் சிங் மற்றும் என்சிபியின் சாகன் புஜ்பால் ஆகியோர் பாஜகவுக்கு தாவியவர்கள். இவர்கள் மீதான வழக்கு விசாரணைகள் ஏன் மற்ற வழக்குகளை போல சூடுபிடிக்கவில்லை என்று எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இப்படி இருக்கையில் நியூஸ் 18 செய்தி ஊடகத்திற்கு பிரத்யேக பேட்டியளித்த பிரதமர் மோடி, “பாஜகவில் இணைந்தவர்கள் மீதான ED வழக்குகள் ரத்தாகவில்லை” என்று கூறியுள்ளார்.
அவர் பேட்டியில் கூறியதாவது, “14 கோடி கிராமப்புற குடும்பத்தினர் இதனால் பயன் அடைகின்றனர். இந்த திட்டங்கள் எல்லாம் சுமார் 25 கோடி பேர் தங்களுடைய வறுமையில் இருந்து வெளியே வருவதற்கு உதவி செய்துள்ளன. இது ஒரு மிகப்பெரும் சாதனை. இதற்காக உலக நாடுகள் இந்தியாவை பாராட்டுகின்றன. இந்தியாவை முன்மாதிரியாக கொண்டு மற்ற நாடுகள் செயல்படுகின்றன.
நாங்கள் தேர்தல் நேர அரசை நடத்தவில்லை. கடந்த 10 ஆண்டுகால எங்கள் ஆட்சியின் சாதனைகளை பார்த்தாலே உங்களுக்கு தெரியும். வார நாட்கள் வெள்ளி, சனி, ஞாயிறு என எந்த நாளிலும் நான் இந்தியாவின் ஏதாவது ஒரு மூலையில் இருந்திருப்பேன். நான் மக்களில் ஒருவன். அவர்களுடன் இருக்க விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.
பாஜகவில் இணைந்த எதிர்க்கட்சி தலைவர்கள் மீதான அமலாக்கத்துறை வழக்கு குறித்து எழுப்பிய கேள்விக்கு, “பாஜகவில் இணைந்தவர்கள் மீதான அமலாக்கத்துறை வழக்குகளில் ஒன்று கூட ரத்து செய்யப்படவில்லை” என்று கூறியுள்ளார்.
மற்றொரு கேள்வியாக, பாஜகவில் இணைந்த எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் 25 பேரில் 23 பேரின் வழக்குகள் கைவிடப்பட்டதாக எழுப்பப்பட்டதற்கு, “அரசியல் கட்சித் தலைவர்கள் மீது வெறும் 3 விழுக்காடு மட்டுமே வழக்குகள் உள்ளன” என்றும் கூறியுள்ளார்.
மோடியின் இந்த பதிலுக்கு இந்தியா கூட்டணி தலைவர்கள் பலரும் விமர்சனம் தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications