‛‛மோடியை நெருங்க முடியாத ராகுல்’’.. நாட்டின் அடுத்த பிரதமராக யார் வேண்டும்? டைம்ஸ்நவ் பரபர சர்வே
டெல்லி: நாட்டின் அடுத்த பிரதமராக யார் வர வேண்டும்? என்பது தொடர்பாக டைம்ஸ்நவ்-இடிஜி சார்பில் மேற்கொள்ளப்பட்ட சர்வேயில் ராகுல் காந்தியை விட பிரதமர் மோடிக்கு தான் மக்களின் ஆதரவு அதிகம் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு இந்த சர்வேயில் இருவருக்கும் இடையேயான வித்தியாசம் என்பது பெரிய அளவில் உள்ளதால் பாஜகவினர் உற்சாகமடைந்துள்ளனர்.
விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் பாஜக செயல்பட்டு வருகிறது. அதேவேளையில் பாஜகவின் வெற்றிக்கு முட்டுக்கட்டை போட காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு ‛இந்தியா' கூட்டணியை உருவாக்கி உள்ளன.

பாஜக தலைமையிலான கூட்டணியை பொறுத்தமட்டில் மீண்டும் பிரதமர் மோடி தான் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட உள்ளார். ஆனால் ‛இந்தியா' கூட்டணியை பொறுத்தமட்டில் பிரதமர் வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இத்தகைய சூழலில் தான் டைம்ஸ்நவ் -இடிஜி சார்பில் பிரதமர் பதவிக்கு பொருத்தமானவர் யார்? அடுத்த பிரதமராக யார் வேண்டும்? என்பது குறித்து சர்வே மேற்கொள்ளப்பட்டது. இந்த சர்வேயில் பிரதமர் மோடி முன்னிலையில் உள்ளார். 2வது இடத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி உள்ளார். இருப்பினும் இருவருக்கும் இடையேயான வித்தியாசம் என்பது அதிகளவில் உள்ளது.
அதாவது இந்த சர்வேயில் பிரதமர் மோடி தான் பிரதமர் பதவிக்கு தகுதியானவர். அவரே மீண்டும் பிரதமராக வர வேண்டும் என்று 64 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். மாறாக ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்று 17 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் பிரதமர் மோடி, ராகுல் காந்தி தவிர மற்றவர்கள் பிரதமராக வர வேண்டும் என்று 19 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
கடந்த 2019 தேர்தலில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி 353 தொகுதிகளில் வென்றது. காங்கிரஸ் தலைமையிலான யூபிஏ கூட்டணி வெறும் 91 இடங்களிலும், மற்றவர்கள் 98 தொகுதிகளிலும் வெற்றி பெற்றனர். இந்நிலையில் தான் அதேபோன்ற வெற்றியை மீண்டும் நாடாளுமன்ற தேர்தலில் பெறும் முனைப்பில் பாஜக செயல்பட்டு வருகிறது.
இத்தகைய சூழலில் பிரதமர் மோடியே மீண்டும் பிரதமராக வேண்டும் என 64 சதவீத மக்கள் ஆதரவு தெரிவித்து இருப்பது பாஜகவினரை உற்சாகமடைய வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications