இந்தியாவில் இதிலும் பெண்களுக்கு எதிராக பாகுபாடு.. மிக பெரிய சிக்கல் ஏற்படும்.. உடனடி ஆக்ஷன் தேவை
டெல்லி: இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பணிகள் வேகமாக நடைபெற்று வரும் நிலையிலும்கூட, ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்களுக்குக் குறைவாகவே தடுப்பூசி போடப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைச் சரி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனத் தடுப்பூசி வல்லுநர் குழு தலைவர் விகே பால் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா 2ஆம் அலை கட்டுக்குள் வந்துள்ளது. தினசரி கொரோனா பாதிப்பும் சரி, உயிரிழப்புகளும் சரி கட்டுக்குள் வந்துவிட்டது.
இதனால் அடுத்தகட்டமாக வேக்சின் பணிகளில் மத்திய அரசு கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது. புதிய வேக்சின் கொள்கை அமலுக்கு வந்ததிலிருந்து தினசரி அதிகப்படியான மக்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.

பாலின பாகுபாடு
நாட்டில் சராசரியாகத் தினசரி 60 லட்சம் பேருக்குத் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. ஆனால் இதுவரை வேக்சின் செலுத்திக் கொண்டவர்களில் 54% ஆண்கள், 46% மட்டுமே பெண்களாகும். அதாவது ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்களுக்கு வேக்சின் செலுத்தும் பணிகள் 8% வரை குறைவாகவே உள்ளது. இந்திய மக்கள்தொகையில் பெண்களைவிட ஆண்கள் 5% அதிகம் என்றாலும் வேக்சின் பணிகளில் பாலின பாகுபாடு அதைவிட அதிகமாக உள்ளது.

எந்த மாநிலங்களில் அதிகம்
உத்தரப் பிரதேசம் மற்றும் டெல்லியில் தடுப்பூசி செலுத்தும் பணிகளில் பாலின பாகுபாடு அதிகமாக உள்ளது. அங்கு 58% ஆண்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ள நிலையில், பெண்களில் 42% பேருக்கு மட்டுமே தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இது முக்கியமான பிரச்சினை என்றும் இதைச் சரி உரிய நடவடிக்கை விரைவாக எடுக்கப்பட வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

நான்கு மாநிலங்கள்
நாட்டிலேயே வெறும் நான்கு மாநிலங்களில் மட்டுமே ஆண்களைவிடப் பெண்களுக்கு அதிகம் வேக்சின் போடப்பட்டுள்ளது. ஆந்திரப் பிரதேசம் (ஆண்கள் 46%, பெண்கள் 53%), கேரளா (ஆண்கள் 48%, பெண்கள் 52%), சத்தீஸ்கர் (ஆண்கள் 50%, பெண்கள் 50%), இமாச்சல் பிரதேசம் (ஆண்கள் 50%, பெண்கள் 49.9%) ஆகிய மாநிலங்களில் மட்டுமே வேக்சின் செலுத்தும் பணிகளில் பாலின பாகுபாடுகள் குறைவாக உள்ளது.

முக்கிய பிரச்சினை
இது குறித்து கொரோனா தடுப்பூசி வல்லுநர் குழு தலைவர் வி கே பால் கூறுகையில், "கொரோனா வேக்சின் பணிகளில் நிலவும் இந்த பாலின பாகுபாடுகள் விரைவாகச் சரி செய்யப்பட வேண்டும். எந்தெந்த மாநிலங்களில் பாலின பாகுபாடு உள்ளது என்பதை ஆய்வு செய்து அதை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்கள் எளிதாக வேக்சின் எடுத்துக் கொள்ளும் சூழலை உருவாக்க வேண்டும்" என்றார்.

எப்படிச் சரி செய்யலாம்
இது பற்றி லான்செட் கமிஷன் குழுவின் உறுப்பினர் டாக்டர் சுனீலா கார்க் கூறுகையில், "ஆஷா தொழிலாளர்கள் ஒவ்வொரு வீடாகச் சென்று தடுப்பூசிகள் பற்றி எடுத்துக் கூற வேண்டும். இந்தியாவில் குடும்பங்களில் ஆண்கள் மூலமே பெண்களுக்கு அனைத்து தகவல்களும் கிடைக்கின்றன. எனவே, முதலில் ஆண்கள் மத்தியில் கொரோனா வேக்சின் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்" என அவர் தெரிவித்தார்.

காரணம் என்ன
கொரோனா தடுப்பூசிகள் பற்றிப் பரவும் போலி தகவல்களே மக்களைத் தடுப்பூசிகளில் இருந்து அந்நியப்படுத்தி வைத்துள்ளது. கொரோனா வேக்சினை போட்டுக் கொள்வதால் நிமோனியா, மூச்சுத் திணறல் ஏற்படும் எனப் பல போலி தகவல்கள் பரவுகின்றன. கொரோனா தடுப்பூசிகள் பெண்களுக்குக் குறைவாகச் செலுத்தப்பட இதுவே முக்கிய காரணம். இதனைச் சரி செய்தால் மட்டுமே வேக்சின் பணிகள் முழுமை பெறும்.












Click it and Unblock the Notifications