விழுப்புரத்தில் சேற்றை வீசிய சம்பவம்.. உண்மையில் அங்கு என்ன நடந்துச்சு தெரியுமா? பொன்முடி விளக்கம்
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் அரசூர் பகுதியில் குடிநீர் வழங்கவில்லை, உணவு வழங்கவில்லை, யாருமே வந்து பார்க்கவில்லை என்று சாலை மறியலில் ஈடுபட்ட மக்களிடம் அமைச்சர் மற்றும் அம்மாவட்ட ஆட்சியர் பழனி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கூட்டத்தில் இருந்த சிலர் அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வாரி வீசினர். இந்த நிலையில் உண்மையில் அங்கு என்ன நடந்தது என்று அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
ஃபெஞ்சல் புயலால் விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 1, 2 ஆம் தேதி மிக கனமழை பெய்தது. வரலாறு காணாத வகையில் ஒரே நாளில் 50 செமீ மழை பதிவானது. இதனால் விழுப்புரத்தில் உள்ள தென்பெண்ணையாறு மற்றும் அதன் கிளை ஆறுகளான மலட்டாறு, பம்பை ஆறு, நரி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால் ஆறுகளின் கரையோரம் உள்ள வீடுகளில் வெள்ளம் புகுந்தது. குறிப்பாக திருவெண்ணெய்நல்லூர், அரசூர், காரப்பட்டு, இருவேல்பட்டு, ஆனத்தூர் போன்ற நூறுக்கும் மேற்பட்ட கிராமகங்களை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கியது. நேற்று வரை வெள்ள நீர் வடியாததாலும், முறையான நிவாரண உதவி செய்யவில்லை என்றும் அப்பகுதி மக்கள் கூறி வந்தனர்.
அரசு அதிகாரிகள் யாரும் வரவில்லை என்றும், எந்த வித உதவிகளும் எங்களுக்கு செய்யவில்லை என்றும் அரசூர் மற்றும் இருவேல்பட்டு பகுதியை சுற்றியுள்ள மக்கள் மறியலில் ஈடுபட்டனர். அதிகாரிகள் பேசியும் மறியல் போராட்டத்தை கைவிடததால், அமைச்சர் பொன்முடி, அம்மாவட்ட கலெக்டர் பழனி உள்ளிட்டோர் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது குடி தண்ணீர் வழங்கவில்லை, சாப்பாடு வழங்கவில்லை, அதிகாரிகள் யாரும் வந்து பார்க்கவில்லை என்று வாக்குவாதம் செய்தனர். அப்போது திடீரென அங்கிருந்தவர்களில் சிலர் அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வாரி வீசினர். இதில் அமைச்சர் பொன்முடி மற்றும் ஆட்சியர் பழனி சில போலீஸ்காரர்களின் சட்டையில் சேறு பட்டது. தொடர்ந்து அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியரை அங்கிருந்து போலீசார் அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் சேற்றை வீசியது யார் என்று எல்லாருக்கும் தெரியும் என அமைச்சர் பொன்முடி விளக்கம் அளித்தார். செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி கூறியதாவது:- இத பண்ணுனது யாருன்னு உங்களுக்கே தெரியும். கை குலுக்கினார்கள். நானும், மாவட்ட அதிகாரிகளும் நின்று கொண்டிருந்தோம். எல்லார் மேலையும் பின்னால் இருந்து சேறை வாரி இறைத்தார்கள். எதோ ஒரு தொலைக்காட்சியில் நான் காரை விட்டு இறங்கவில்லை என்றும், அதனால் தான் என் மீது சேற்றை வீசினார்கள் என்று போடுறாங்க.
அது எந்த தொலைக்காட்சி என்று தெரியலை. உங்களுக்கு தெரிஞ்சுருக்கும். நாங்க காரை விட்டு இறங்கி அரை மணி நேரமாக வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டோம். அப்படி ஒரு இடத்துக்கு சென்று விட்டு வரும் போது தான் வேண்டும் என்றே அரசியல் ஆக்குவதற்காக என் மீது சேற்றை வீசினர். அதுவும் அவர் சொல்கிறார் என்றால், இத செய்ததே அந்த கட்சியை சேர்ந்தவர்கள் தான். அது யாருன்னு உங்களுக்கே தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications