"மோடிஜி நீங்களே பிரதமராக வர வேண்டும்".. குண்டை போட்ட முலாயம் சிங் யாதவ்
பிரதமர் மோடிக்கு முலாயம் சிங் யாதவ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
டெல்லி: "நீங்கள் மீண்டும் பிரதமராக நான் வாழ்த்துகிறேன்" என்று மோடியை பார்த்து முலாயம்சிங் யாதவ் கூறிய பேச்சு நாடெங்கும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வருகிற மே மாதத்துடன் மக்களவையின் பதவிக்காலம் முடிவடைய போகிறது. அதனால் இன்று பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாள் என்பதால் கிட்டத்தட்ட பெரும்பாலானோர் உருக்கமாக பேசினர்.
அதிலும் உ.பி. முன்னாள் முதல்வரும், இதில் எதிர்பாராத பேச்சு சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் தலைவர் முலாயம் சிங் யாதவ் பேசியதுதான் இன்றைய ஹைலைட்!
உருக்கமான பேச்சு
கடைசி நாள் அமர்வு இன்று நடந்து வரும் நிலையில், "மோடி மீண்டும் பிரதமராக வாழ்த்துகிறேன்" என்று சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் தலைவர் முலாயம் சிங் யாதவ் பேசியுள்ளார்.அப்போது அவர் பேசும்போது சொன்னதாவது:
விருப்பத்திற்குரிய பிரதமர்
"அவையில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் கண்டிப்பாக மீண்டும் வெற்றி பெறுவார்கள். வெற்றி பெற்று அனைத்து உறுப்பினர்களும் இந்த அவைக்கு மீண்டும் வர வேண்டும். மோடியே இந்த முறையும் பிரதமராக வருவார். அவர்தான் எங்களின் விருப்பத்திற்குரிய பிரதமர். மோடியின் ஆட்சியில் அனைத்து கோப்புகளும் வேகமாக நகருகின்றன. அடுத்த முறையும் அவரே பிரதமராக வந்து சிறப்பாக பணியாற்ற வேண்டும்" என்றார்.
வாழ்த்துகிறேன்
சரி, பாஜகவின் கடைசி மக்களவை கூட்டத்தொடர் என்பதால் பொத்தாம் பொதுவாகத்தான் சொல்கிறார் என்று பார்த்தால், திடீரென எதிரே உட்கார்ந்திருந்த மோடியை பார்த்தார் முலாயம்சிங். பிறகு, "நீங்கள் மீண்டும் பிரதமராக நான் வாழ்த்துகிறேன்" என்றதும் அவையில் இருந்தவர்களுக்கு ஒரு கணம் ஒன்றுமே புரியவில்லை. இத்தனைக்கும் அவருக்கு அருகிலேயே சோனியா காந்தி உட்கார்ந்திருந்தார்.
மாயாவதி
அகிலேஷ் யாதவோ பாஜகவுக்கு எதிராக அணி திரட்டுவதில் மும்முரமாகவும், முழு மூச்சாகவும் இருக்கிறார். இதற்காகவே எப்போதும் ஆகாத மாயாவதியுடன் கை கோர்த்து கொண்டுள்ளார்.
சலசலப்பு
இந்த நிலையில், அவரது அப்பா முலாயம் சிங் யாதவ், மோடிக்கு ஆதரவாக பேசியதுடன், கூடவே ஒரு வாழ்த்தையும் தெரிவித்துள்ளது இந்திய அரசியல் வட்டாரத்தையே சலசலப்புக்கு உள்ளாக்கி உள்ளது. ஆக மொத்தம், ஆடு உறவு, குட்டி பகையா என்று கேட்க வைத்துவிட்டார் முலாயம்சிங் யாதவ்.