ரஜினியை நாங்கள் அழைக்கவேயில்லை...! முரளிதரராவ் பேட்டி
டெல்லி: நடிகர் ரஜினிகாந்தை தாங்கள் அழைக்கவேயில்லை இல்லை என்றும், அதற்குள் பாஜக அழைப்பை ரஜினி நிராகரித்துவிட்டார் என வதந்திகள் பரப்பப்படுவதாகவும் அக்கட்சியின் தேசியச் செயலாளரும், தமிழக பொறுப்பாளருமான முரளிதர ராவ் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டதை அடுத்து தலைவர் பதவி காலியாக உள்ளது. அந்த இடத்தை பிடிப்பதற்காக தமிழக பாஜக நிர்வாகிகள் மத்தியில் கடும் போட்டி உள்ள சூழலில், நடிகர் ரஜினிகாந்த் அந்த பதவிக்கு வரக்கூடும் என தகவல்கள் உலா வந்தன. ஆனால் அதனை அடியோடு மறுத்து விளக்கம் அளித்துள்ளார் முரளிதரராவ்.

இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
நடிகர் ரஜினிகாந்தை பாஜகவிற்கு வருமாறு தாங்கள் அழைக்கவில்லை என்றும், உண்மை அப்படியிருக்க பாஜக அழைப்பை அவர் ஏற்கவில்லை எனக் கூறுவது தவறு எனவும் தெரிவித்தார். மேலும், தமிழக பாஜகவுக்கு தலைவரை நியமிப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், அடுத்த 15 நாட்களுக்குள் கூட புதிய தலைவர் நியமிக்கப்படுவர் எனவும் கூறினார்.
தமிழக பாஜகவில் உட்கட்டமைப்புகளை மேம்படுத்தி அடுத்த 6 மாதங்களில் கட்சியை வலுப்படுத்துவோம் என்றும், காஷ்மீர் விவகாரத்தில் எதிர்கட்சிகள் பரப்பும் பொய் பிரச்சாரத்தை முறியடிக்கும் வகையில், மக்களவை தொகுதி வாரியாக பொதுக்கூட்டங்கள் நடத்தி உண்மை நிலை எடுத்துக்கூறப்படும் எனக் கூறினார்.












Click it and Unblock the Notifications