எனது மனசாட்சி இதுக்கெல்லாம் இடம் கொடுக்காது.. ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தின் போது டென்ஷன் ஆன ஓவைசி!
டெல்லி: தண்ணீரும் ரத்தமும் ஒன்றாக செல்ல முடியாது என்று கூறிவிட்டு, நீங்கள் கிரிக்கெட் போட்டி விளையாட போகிறீர்களா? அந்தப் போட்டியை பார்க்க எனது மனசாட்சி இடம் கொடுக்காது என்று ஹைதராபாத் எம்பி அசாதுதீன் ஓவைசி கூறியுள்ளார். பாகிஸ்தானின் விமானங்கள் நமது வான் எல்லைக்குள் வர முடியாத நிலையில், அவர்களுடைய படகுகள் நமது தண்ணீர் பகுதிக்குள் வர முடியாத நிலையில், வர்த்தகம் முடிந்துவிட்டது. பிறகு கிரிக்கெட் போட்டி மட்டும் எப்படி அவர்களுடன் விளையாடுவீர்கள்? என்றும் நாடாளுமன்றத்தில் ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தின் போது கூறினார்.
கடந்த ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதி பஹல்காம் சென்றிருந்த 26 அப்பாவி சுற்றுலாப் பயணிகளை பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர். லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் துணை அமைப்பான 'ரெசிஸ்டன்ட் பிரண்ட்' என்ற அமைப்பு இந்த கொடூரத்தை அரங்கேற்றியது.

கிரிக்கெட் போட்டி மட்டும் எப்படி?
இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை எடுத்தது. இதனால் நிலைகுலைந்த பாகிஸ்தான் ராணுவம், இந்திய எல்லைப்பகுதிகளில் டிரோன்களை கொண்டு தாக்கியது. இதற்கும் இந்திய ராணுவம் வலுவான பதிலடி கொடுத்தது. இதையடுத்து, பின்வாங்கிய பாகிஸ்தான், சண்டை நிறுத்தம் கேட்டதால் இந்த தாக்குதல் நிறுத்தப்பட்டது. எனினும், ஆபரேஷன் சிந்தூர் நிறுத்தப்பட்டதை டிரம்ப் முதலில் அறிவித்ததால், இந்த விவகாரத்தில் மத்திய அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம் சாட்டி வருகின்றன.
இவ்விவகாரம் குறித்து மழைக்கால கூட்டத்தொடரில் விவாதிக்க வேண்டும் எனக்கூறி தொடர் அமளியில் ஈடுபட்டன. இதனையடுத்து நேற்று விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின் போது ஹைதராபாத் எம்பி அசாதுதீன் ஓவைசி பேசியதாவது:- பாகிஸ்தானின் விமானங்கள் நமது வான் எல்லைக்குள் வர முடியாத நிலையில், அவர்களுடைய படகுகள் நமது தண்ணீர் பகுதிக்குள் வர முடியாத நிலையில், வர்த்தகம் முடிந்துவிட்டது. பிறகு கிரிக்கெட் போட்டி மட்டும் எப்படி அவர்களுடன் விளையாடுவீர்கள்?
எனது மனசாட்சி இடம் கொடுக்காது
பாகிஸ்தானுக்கு வழங்கும் தண்ணீரை நிறுத்திவிட்டோம். பாகிஸ்தானுக்கு செல்லும் 80 சதவீத தண்ணீரை நிறுத்திவிட்டோம். தண்ணீரும் ரத்தமும் ஒன்றாக செல்ல முடியாது என்று கூறிவிட்டு, நீங்கள் கிரிக்கெட் போட்டி விளையாட போகிறீர்களா? அந்தப் போட்டியை பார்க்க எனது மனசாட்சி இடம் கொடுக்காது" என்றார்.
8 நாடுகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் வரும் செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி தொடங்குகிறது. இதில் இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே குரூப்பில் இடம் பெற்றுள்ளன. இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டி செப்டம்பர் 14 ஆம் தேதி நடைபெறுகிறது. இரு அணிகளும் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும் என்று எதிர்பார்க்கபடுவதால் மீண்டும், அந்த சுற்றிலும் மல்லு கட்ட வாய்ப்பு உள்ளது. இறுதிபோட்டிக்கும் முன்னேறிவிட்டால் அங்கேயும் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பங்கேற்கும் போட்டி நடைபெறும்.
பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாடுவது
இதனால், ஆசிய கோப்பை போட்டி தொடரில் அதிகபட்சமாக மூன்று முறை மோத வாய்ப்புள்ளது. சமீபத்தில் நடைபெற்ற லெஜன்ட்ஸ் கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி ரத்து செய்யப்பட்டது. இங்கிலாந்து நடைபெற்று வரும் இந்த தொடரில் ஹர்பஜன் சிங், இர்பான் பதான், ஷிகர் தவான் போன்ற முன்னணி வீரர்கள் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட மறுத்ததால் போட்டி ரத்து செய்யப்பட்டது.
பஹல்காம் தாக்குதலின் ரணம் கூட இன்னும் ஆறாத நிலையில், பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாடுவது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று எதிர்க்கட்சிகள் வாதிட்டு வருகின்றன. ரத்தத்தில் பணம் சம்பாதிக்க துடிப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சனத்தை முன்வைத்து வருகின்றன. ஒருபக்கம் ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை என்று இந்திய தலைமை தளபதி கூறுகிறார். இன்னொரு பக்கம், ரத்தத்தில் பணம் ஈட்ட நீங்கள் துடிக்கிறீர்கள் என உத்தவ் சிவசேனா எம்பி பிரியங்கா சதுர்வேதி பேசியிருந்தார்.












Click it and Unblock the Notifications