மேற்கு வங்கத்தின் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் மத்திய பணிக்கு மாற்றம்: தன்னிச்சையாக தூக்கியடித்த மத்திய அரசு
டெல்லி: பாஜக தேசிய தலைவா் ஜே.பி.நட்டாவின் பாதுகாப்பு வாகனம் தாக்குதலுக்கு உள்ளானதைத் தொடா்ந்து, 'உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யத் தவறியதன் காரணமாக மேற்கு வங்க மாநிலத்தைச் சோ்ந்த 3 ஐபிஎஸ் அதிகாரிகளை மத்தியப் பணிக்கு வருமாறு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்தது.
வழக்கமாக, ஐஏஏஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் அதிகாரிகளை மத்தியப் பணிக்கு அழைக்க மத்திய அரசு விரும்பினால், மாநில அரசின் ஒப்புதலை கேட்கும். ஒப்புதல் கொடுத்தால் தான் மத்திய அரசு பணிக்கு மாற்றும்.
ஆனால், மேற்கு வங்க மாநில விவகாரத்தில், அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜியை கேட்காமல் மத்திய உள்துறை அமைச்சகம் தன்னிச்சையாக முடிவெடுத்து, மூன்று ஐபிஎஸ் அதிகாரிகளையும் மத்தியப் பணிக்கு அழைத்திருக்கிறது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பாதுகாப்பு பொறுப்பு
பாஜக தேசிய தலைவா் ஜே.பி.நட்டா அண்மையில் மேற்கு வங்க மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவருக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று டைமண்ட் ஹார்பா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் போலந்த் பாண்டே, பிரசிடென்ஸி மண்டல காவல்துறை டிஐஜி பிரவீண் திரிபாதி, தெற்கு வங்க காவல்துறை ஏடிஜி ராஜீவ் மிஸ்ரா ஆகிய மூவருக்கும் பொறுப்பின வழங்கி மத்திய உள்துறை அமைச்சம் சுற்றறிக்கை அனுப்பி இருந்தது.

திரும்ப அழைப்பு
ஆனால் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யத் தவறியதன் அடிப்படையில், அந்த மூன்று ஐபிஎஸ் அதிகாரிகளும் மத்தியப் பணிக்கு திரும்ப அழைக்கப்படுவதாக உள்துறை அமைச்சகம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. அகில இந்திய குடிமைப்பணி அதிகாரிகள் நிர்வாகச் சட்டத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மாநில அரசை கேட்க வேண்டும்
உள்துறை அமைச்சகத்தின் இந்த தன்னிச்சையான நடவடிக்கை, மத்திய அரசுக்கும் மேற்கு வங்க அரசுக்கும் இடையேயான மோதல் போக்கை மேலும் அதிகரித்துள்ளது. வழக்கமாக, ஐஏஏஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் அதிகாரிகளை மத்தியப் பணிக்கு அழைக்க மத்திய அரசு விரும்பினால், மாநில அரசின் ஒப்புதலை கேட்கும். ஒப்புதல் கொடுத்தால் தான் மத்திய அரசு பணிக்கு மாற்றும். ஆனால் மாநில முதல்வர் மம்தாவை கேட்காமல், மத்திய உள்துறை அமைச்சகம் தன்னிச்சையாக இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

யாரையும் அனுப்ப முடியாது
முன்னதாக மேற்கு வங்க மாநில சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்து டெல்லியில் நாளை நடைபெற இருக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்குமாறு மேற்கு வங்க மாநில அரசு தலைமைச் செயலருக்கும், காவல்துறை டிஜிபிக்கும் மத்திய உள்துறை அமைச்சக செயலா் அனுப்பிய அழைப்பாணையை, மேற்கு வங்க அரசு நிராகரித்தது. மேலும், மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்ட மாநில சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்த அறிக்கையையும் மேற்கு வங்க அரசு அனுப்ப மறுத்துவிட்டது.

சட்டம் ஒழுங்கு
இந்தச் சூழலில், மாநிலத்தின் மூன்று ஐபிஎஸ் அதிகாரிகளை மத்தியப் பணிக்கு மாற்றி மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்திருக்கும் உத்தரவை மேற்கு வங்க அரசு ஏற்குமா அல்லது அதையும் நிராகரிக்குமா என்ற பரபரப்பு நிலவுகிறது. இதற்கிடையே திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, மேற்கு வங்க சட்ட ஒழுங்கு விவகாரம் மாநில அரசின் கட்டுபபாட்டில் உள்ளவை என்று விளக்கம் அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications