மோடி விளம்பரத்தில் மன்னன், வளர்ச்சிக்கு வில்லன்... காங்கிரஸ் கடும் தாக்கு!!
டெல்லி: பிரதமர் மோடி விளம்பரம் செய்வதில் மன்னனாகவும், வளர்ச்சிக்கு வில்லனாகவும் செயல்படுகிறார் என்று காங்கிரஸ் கட்சி கடுமையாக சாடி இருக்கிறது.
லோக்சபா தேர்தல் பிரச்சாரம் உச்சக்கட்டத்தை எட்டி இருக்கிறது. வட இந்தியாவில் நட்சத்திர அந்தஸ்து பெற்ற பல தொகுதிகளில் தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி, அங்கு தலைவர்கள் ஒருவரைக்கொருவர் சரமாரியாக தாக்கியும், விமர்சித்தும் வாக்காளர்களின் மனதை தம் பக்கம் இழுக்க முனைந்து வருகின்றனர்.

இந்த நிலையில், காங்கிரஸ் செய்திதொடர்பாளர் ஜெய்வீர் ஷெர்கில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,"பிரதமர் மோடி பல திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தியது போன்று வெற்று பிரச்சாரம் செய்து வாக்காளர்களிடம் தவறான அணுகுமுறையை மேற்கொண்டுள்ளார்.
பிரதமர் மோடி, இதுபோன்ற வெற்று பிரச்சாரங்கள் செய்வதில் மன்னனாகவும், வளர்ச்சிக்கு வில்லனாகவும் இருக்கிறார். அவர் தேசிய மேலாண்மையை புறக்கணித்து, நிகழ்ச்சி மேலாண்மை செய்வதிலேயே கவனத்தை செலுத்துகிறார்.
மோடியின் உறுதிமொழிகளை பூதக்கண்ணாடி வைத்து பார்த்தால், அது உண்மையில் கானல் நீர் போன்று ஒன்றுமில்லாமல் போகும். மூன்று ஆண்டுகளில் 5 கோடி பேருக்கு சமையல் எரிவாயு வழங்கும் உஜ்வாலா திட்டம் தோல்வியே சான்றாக அமைந்துள்ளது.
மத்திய தணிக்கை குழு அறிக்கையின்படி, இந்த திட்டம் துவங்கப்பட்டதற்கு பின்னர், எல்பிஜி சிலிண்டர் இணைப்பு பயன்பாட்டு சராசரியானது வெகுவாக குறைந்துள்ளது. இது மோடியின் வாக்குறுதி குறித்த எச்சரிக்கையாக எடுத்துக் கொள்வதோடு, அவரை மக்கள் நம்பக்கூடாது.
மேலும், சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை கணிசமாக உயர்த்தி ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரிடம் மத்திய பாஜக அரசு கொள்ளையடித்துவிட்டது. மோடி பிரதம அமைச்சர் என்பதைவிட பிரச்சார அமைச்சர் போன்று செயல்படுகிறார். வெற்று திட்டங்களுடன் இந்திய வாக்காளர்களை அவர் தவறான பாதைக்கு வழிநடத்துகிறார்.
பாகிஸ்தான் குறித்து மட்டுமே எப்போதும் பேசி வருகிறார். ஆனால், இந்தியாவில் அவர் எந்த ஒரு நலத் திட்டங்களையும் மேற்கொள்ளவில்லை. அவரிடம் பேசுவதற்கு எதுவும் இல்லை. கடந்த 5 ஆண்டுகளில் பாஜகவின் ஆட்சி ஒரு விலை உயர்ந்த வெற்று காலண்டராகவே சொல்ல முடியும்," என்று ஜெய்வீர் ஷெர்கில் கூறி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications