மோடி சர்க்கார் 2.0: ஓராண்டு பதவிக்காலத்தை நிறைவு செய்த பாஜக அரசு.. சாதித்தது என்ன? சறுக்கியது எங்கே?
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக மறுபடியும் ஆட்சிக்கு வந்து மே 30ம் தேதியான இன்றுடன் ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது.
Recommended Video
இந்த ஓராண்டு காலகட்டத்தில், உலகமே உற்றுப் பார்க்கும், பல முக்கிய முடிவுகளை மோடி அரசு அதிரடியாக எடுத்தது. அது ஆரோக்கியமான முடிவா அல்லது, அநாவசியமானதா என்பது பற்றிய சர்ச்சைகள் ஒருபக்கம் இருந்தாலும், அப்படியான முக்கிய முடிவுகள் மற்றும் சறுக்கல்கள் எவை என்பதை பற்றிய ஒரு பார்வை இதோ:
முத்தலாக் மசோதா நிறைவேற்றப்பட்டது. முத்தலாக் செய்யும் ஆண் குற்றவாளி என வரையறுக்கப்பட்டது. இது பாலின நீதிக்கான ஒரு படி என்று அரசு கூறியது. ஆனால், இது சிறுபான்மையினரை அந்நியப்படுத்துவதற்கும், முஸ்லீம் ஆண்களுக்கு சிக்கலை ஏற்படுத்துவதற்குமான முயற்சி என்று விமர்சனங்கள் எழுந்தன.
இந்தியா முன்னுதாரணமாக மாறப்போகிறது.. நாட்டு மக்களுக்கு மோடி அதிரடி கடிதம்.. தொழிலாளர் பற்றி உருக்கம்
காஷ்மீர்
ஆகஸ்ட் 5 ம் தேதி, அரசு யாரும் எதிர்பார்க்காத ஒரு நடவடிக்கையை எடுத்தது. ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. 370வது சட்டப் பிரிவை ரத்து செய்தது. ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்பட்டன.
இந்த நடவடிக்கைகள் இந்தியாவின் பிற பகுதிகளுடன் காஷ்மீரை ஒருங்கிணைக்க வழிவகுக்கும் என்றும், இப்பிராந்தியத்தில் உள்ள குடிமக்கள் மற்ற இடங்களில் உள்ள குடிமக்களைப் போலவே அதே உரிமைகளை அனுபவிக்கவும், பிரிவினைவாதம் மற்றும் பயங்கரவாதத்தை தோற்கடிக்கவும் உதவும் என்று அரசு கூறியது.
தடுப்புக் காவல்கள்
ஆனால், இந்த நடவடிக்கை பற்றி, காஷ்மீர் தலைவர்கள் மற்றும் மக்களுடன் கலந்தாலோசிக்கப்படவில்லை என்ற உண்மையை விமர்சகர்கள் சுட்டிக்காட்டினர். பெரிய அளவிலான தடுப்புக்காவல்கள் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளுடன் இந்த முடிவு செயல்படுத்தப்பட்டது. இது அந்நியப்படுதலுக்கு வழிவகுக்கும் என்பது எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு.
ராமர் கோவில்
மற்றொரு குறிப்பிடத்தக்க மைல்கல் இந்த ஆட்சியில் நடந்தது. இது பாஜகவின் நீண்டகால அரசியல் கோஷத்தோடு ஒத்துப்போனது. ஆனால் அரசுக்கு பெரிய பங்கு இல்லை. ஆம். அயோத்தி ராமர் கோவில் வழக்கில் ஒரு முக்கிய தீர்ப்பு உச்சநீதிமன்றத்தால் வெளியானது. 1992 ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டது சட்டவிரோதமானது என்றும், ஆனால், அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் முன்பு கோவிலாக இருந்தது என்றும் தீர்ப்பு வழங்கியது உச்சநீதிமன்றம். அந்த இடத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கு இந்த தீர்ப்பு உதவியது. வழக்கை வேகப்படுத்த அரசு ஒத்துழைப்பு வழங்கியது என்பதால் இதுவும் எங்கள் சாதனைதான் என்கிறது பாஜக.
தேர்தல் சறுக்கல்கள்
பாஜகவுக்கு மத்தியில் பெரும் வெற்றி கிடைத்தாலும், மாநிலங்களில் கூட்டணிகளில் சறுக்கியது. மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு நடந்த முதல் மாநிலத் தேர்தலில், மகாராஷ்டிராவில் பாஜகவுக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாஜக கூட்டணி பெரும்பான்மையை பெற்றது.
ஆனால் கூட்டணியிலிருந்த சிவசேனா, சுழற்சி முறையில் முதல்வர் பதவியை கோரியது. பாஜக மறுத்தபோது, சிவசேனா காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து ஆட்சியை பிடித்தது. பாஜக என்சிபி தலைவர் அஜித் பவாரை இழுக்க முயன்றது, ஆனால் முயற்சி தோல்வியடைந்தது. முதல்வராக உத்தவ் தாக்கரே பொறுப்பேற்றார். இந்தியாவின் மிக முக்கியமான மாநிலங்களில் ஒன்றை பாஜக இழந்தது.
ஆட்சியை இழந்த பாஜக
ஹரியானாவில், பாஜக அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொண்டது. ஆனால் அது பெரும்பான்மை பலத்தை இழந்துதான் தக்க வைத்தது. துஷ்யந்த் சவுதலாவுடன் கூட்டணி வைக்க வேண்டியிருந்தது. ஜார்க்கண்டில், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா-காங்கிரஸ் கூட்டணியிடம் பாஜக அதிகாரத்தை இழந்தது. டெல்லியில், இந்த ஆண்டின் தொடக்கத்தில் தேர்தல் நடந்தது. பல பாஜக தலைவர்கள் வெறுக்கத்தக்க பேச்சுக்களை வெளிப்படுத்தி குற்றச்சாட்டுக்கு ஆளான கடும் யுத்த களத்தில், ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து இரண்டாவது முறையாக வென்று, அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் முதல்வரானார்.
பிரதமர் மோடி மிகவும் பிரபலமான தேசியத் தலைவராக இருப்பதாக கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. ஆனால் மாநில அளவில் பாஜக சறுக்கி வருகிறது.
குடியுரிமை திருத்தச் சட்டம்
பாஜக ஆட்சி மற்றொரு அரசியல் சவாலையும் எதிர்கொண்டது. குடியுரிமை (திருத்தம்) சட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் மற்றும் குடிமக்கள் தேசிய பதிவேடுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள்தான் அது. பெரும்பாலும் முஸ்லிம்கள் இந்த சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பாஜகவின் ஆதரவு தளம் அரசுக்கு பின்னால் அணிதிரண்டாலும், எதிர்க்கட்சிகள் சமூக நல்லிணக்கம் குறித்து கேள்விகளை எழுப்பின. சர்வதேச விமர்சனத்திற்கும் வழிவகுத்தது.
பொருளாதாரம்
பொருளாதார வளர்ச்சியிலும், பெரும் சரிவை இந்தியா கண்டு வருகிறது. 2019-2020 ஆம் ஆண்டின் கணக்கெடுப்புபடி, பொருளாதார வளர்ச்சி 4.2% ஆக சரிந்தது. முந்தைய ஆண்டில் அது, 6.1% என்ற அளவில் இருந்தது. தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக, பொருளாதார வளர்ச்சி குறைந்தது. கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ தேசிய புள்ளிவிவர அமைப்பு அறிக்கை, வேலைவாய்ப்பில்லாதோர் எண்ணிக்கை 2017-18 ஆம் ஆண்டில் 45 ஆண்டுகளில் இல்லாத அளவு உயர்ந்ததை சுட்டிக் காட்டுகிறது. வளர்ச்சி மந்தமாக இருந்தது, வேலையின்மை அதிகரித்தது, தேவை வீழ்ச்சியடைந்தது, வங்கி சாரா நிதி நிறுவனங்கள் பல சிக்கலில் சிக்கியது போன்றவை பொருளாதாரத்திற்கு பெரும் சவாலாக மாறியுள்ளன.