எல்லாத்தையும் பெர்சனலா எடுத்துக்காதீங்க.. மாலத்தீவு விவகாரத்தில் மோடிக்கு காங்கிரஸ் அட்வைஸ்!
டெல்லி: பிரதமர் மோடி அதிகாரத்திற்கு வந்ததில் இருந்தே அனைத்தையும் தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொள்கிறார் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி கடந்த 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் லட்சத்தீவுக்கு சென்று இருந்தார். லட்சத்தீவில் உள்ள கடற்கரையில் நடைபயிற்சி மேற்கொண்ட பிரதமர் மோடி, ஆழ்கடல் நீச்சல் பயிற்சியிலும் ஈடுபட்டார். இதுதொடர்பான புகைப்படங்களை தனது 'எக்ஸ்' சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டார். மேலும் ''சாகசத்தை விரும்புபவர்களுக்கு லட்சத்தீவு தான் சரியான தேர்வு'' என்றும் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருந்தார்.

லட்சத்தீவு சுற்றுப்பயணத்தை ஊக்குவிக்கும் விதமாக பிரதமர் மோடியின் இந்த பயணம் அமைந்து இருந்தது. இந்த நிலையில், மாலத்தீவைச் சேர்ந்த அமைச்சர்கள் பிரதமர் மோடிக்கு எதிரான கருத்துகளையும் இந்தியாவுக்கு எதிரான இனவெறி கருத்துகளையும் கூற ஆரம்பித்தனர். குறிப்பாக மாலத்தீவின் கலைத்துறை துணை அமைச்சரே இந்தியப் பிரதமர் மோடி குறித்து மிக மோசமான கருத்துகளைத் தெரிவித்தார்.
மாலத்தீவு விளக்கம்: அமைச்சர் பதவியில் இருக்கும் ஒருவர் இப்படி மோசமான கருத்துகளைக் கூறியது சர்ச்சையைக் கிளப்பியது. அவருடன் வேறு சில அமைச்சர்களும் பிரதமர் மோடியை அவமதிக்கும் வகையில் கருத்துகளைப் பதிவிட்டனர். இதனால், கொதித்து போன இந்தியர்கள் மாலத்தீவுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்டனர். பாலிவுட் நடிகர்கள் அக்சய் குமார் தொடங்கி பலரும் கண்டித்தனர்.

மேலும், இந்தியர்கள் பலரும் தங்கள் மாலத்தீவு பயணத்தை ரத்து செய்தனர். தீவுக்கூட்டங்களை உள்ளடக்கிய மாலத்தீவு நாடு தனது வருவாய்க்கு சுற்றுலாவையே நம்பி உள்ளது. இதனால், கலங்கிப் போன அந்த நாடு, உடனடியாக சர்ச்சை கருத்துக்களை வெளியிட்ட அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. மாலத்தீவு அமைச்சர்கள் கூறிய கருத்துக்கும் அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அவர்களின் தனிப்பட்ட கருத்து அது என்றும் மாலத்தீவு விளக்கம் அளித்தது.
மல்லிகார்ஜுன கார்கே கருத்து: பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணத்தை விமர்சித்த மாலத்தீவு முன்னாள் அமைச்சர்களுக்கு தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் கண்டனங்கள் வலுத்து வருகின்றன. இந்த நிலையில், மாலத்தீவு விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சி அறிவுரைகளை வழங்கியுள்ளது. மல்லிகார்ஜுன கார்கே இது தொடர்பாக கூறியதவாவது:-
மோடி அதிகாரத்திற்கு வந்ததில் இருந்தே அனைத்தையும் தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொள்கிறார். சர்வதேச அளவில், அண்டை நாடுகளுடன் நாம் நல்ல உறவைப் பேணிக்காக்க வேண்டும். காலத்துக்கு ஏற்ப நாம் செயல்பட வேண்டும். நமது அண்டை நாடுகளை ஒருபோதும் மாற்ற முடியாது" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications