சூப்பர் தகவல்:தமிழக வேலைவாய்ப்பின்மை 4.1%ல் இருந்து 3.2% ஆக குறைந்தது-ஹரியானாவில் தலைவிரித்தாடுகிறது
டெல்லி: தமிழகத்தில் வேலைவாய்ப்பின்மை விகிதமானது 4.1%-ல் இருந்து 3.2% ஆக குறைந்திருப்பதாக இந்திய பொருளாதார ஆய்வு நிறுவனம் Monitoring Indian Economy (CMIE) தெரிவித்துள்ளது.
Monitoring Indian Economy (CMIE) நிறுவனம் வெளியிட்டு தரவுகள் விவரம்: இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை விகிதமானது மார்ச் மாதத்தில் 7.60% ஆக இருந்தது. இது ஏப்ரல் மாதத்தில் 7.83% ஆக உயர்ந்துள்ளது. நாட்டிலேயே ஹரியானாவில்தான் வேலைவாய்ப்பின்மை மிக அதிகமாக உள்ளது.

ஹரியானா மாநிலத்தில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 34.5% ஆக உள்ளது; இதற்கு அடுத்ததாக ராஜஸ்தான் மாநிலத்தில் வேலைவாய்ப்பின்மை விகிதமானது 28.8% ஆக உள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் மார்ச் மாதம் 4.1% ஆக இருந்த வேலைவாய்ப்பின்மை விகிதம் ஏப்ரலில் 3.2% ஆக குறைந்துள்ளது.
நகர்ப்புறங்களில் வேலைவாய்ப்பின்மையானது மார்ச் மாதத்தில் 8.28% ஆக இருந்தது. இது ஏப்ரல் மாதத்தில் 9.22% ஆக அதிகரித்திருக்கிறது. ஆனால் ஊரகப் பகுதிகளில் மார்ச் மாதம் 7.29% ஆக இருந்த வேலைவாய்ப்பின்மை ஏப்ரலில் 7.19% ஆக குறைந்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 15.6% என உள்ளது.. அஸ்ஸாம், மத்தியப் பிரதேசம், மேகாலயா, ஒடிசா மாநிலங்களில் வேலைவாய்ப்பின்மை குறைவு.
மத்திய அரசு கடந்த மாதம் 28-ந் தேதி முக்கிய துறைகளின் வேலைவாய்ப்பு தொடர்பான காலாண்டு ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் வரை உற்பத்தி, வர்த்தகம் உள்ளிட்ட 9 துறைகளில் மொத்தம் 4,00,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் உற்பத்தி, கட்டுமானம், வர்த்தகம், போக்குவரத்து, கல்வி, சுகாதாரம், விருந்தோம்பல், தகவல் தொழில்நுட்பம்/பிபிஓ மற்றும் நிதி சேவைகள் ஆகிய ஒன்பது முக்கிய துறைகளில் வேலைவாய்ப்புகள் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. 10 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்களைக் கொண்ட நிறுவனங்கள் பிரிவில் இந்த ஒன்பது துறைகள் மொத்த வேலைவாய்ப்பில் 85 சதவீதத்திற்கு பொறுப்பாகும்.
அதேபோல் 10 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்களை பணியமர்த்தும் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு அதிகரித்து வருவதை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. வேலைவாய்ப்புகளில் உற்பத்தி துறை 39% உடன் முதல் இடத்திலும், கல்வி துறை 22% உடன் இரண்டாவது இடத்திலும் உள்ளன.
ஏறக்குறைய அனைத்து (99.4%) நிறுவனங்களும் வெவ்வேறு சட்டங்களின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. சுமார் 23.55% நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்களுக்கு வேலையில் பயிற்சி அளித்தன என்றும் மத்திய அரசின் காலாண்டு ஆய்வு அறிக்கை குறிப்பிடுகிறது.












Click it and Unblock the Notifications