‘இஸ்ரேலுக்கு’ உளவு.. கத்தாரில் தூக்கு மேடையில் 8 இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள்.. சதிவலை காரணமா?
டெல்லி: கத்தார் கடற்படை தொடர்பான தகவல்களை இஸ்ரேலுக்கு சட்டவிரோதமாக வழங்கியதால் கைது செய்யப்பட்ட 8 இந்திய கடற்படையின் முன்னாள் வீரர்கள் தற்போது தூக்கு மேடையில் நிறுத்தப்பட்டுள்ளனர். 8 இந்திய கடற்படையினரும் சதித் திட்டங்களால் இந்த பொய் வழக்கில் சிக்க வைக்கப்பட்டிருக்கலாம் என்கின்றன வெளியுறவுத்துறை வட்டாரங்கள்.
கத்தார் நாட்டில் உள்ள "தாஹ்ரா குளோபல் டெக்னாலஜிஸ் மற்றும் கன்சல்டிங் சர்வீசஸ்" என்ற நிறுவனத்தில் இந்திய கடற்படையின் முன்னாள் வீரர்கள் பெருமளவு பணியாற்றினர். இவர்களில் பலரும் உயர் பதவி வகித்து வந்தனர். இந்நிறுவனம் கத்தார் நாட்டு கடற்படைக்கான பணிகளை செய்து கொடுத்தது.

இத்தாலியின் தொழில்நுட்ப அடிப்படையில் நீர்மூழ்கிக் கப்பல்களை பெறும் பணியை தாஹ்ரா குளோபல் டெக்னாலஜிஸ் மற்றும் கன்சல்டிங் சர்வீசஸ் நிறுவனம் மேற்கொண்டிருந்தது. ரேடார் கண்களில் மண்ணைத் தூவக் கூடிய தொழில்நுட்பத்தைக் கொண்டது இத்தாலிய தயாரிப்பு. இதனால் கத்தார் அரசு இதனை முதன்மையான பாதுகாப்பு நடவடிக்கையாக கருதியது.
8 பேர் திடீர் கைது: இந்த நிலையில் கடந்த ஆண்டு திடீரென தாஹ்ரா குளோபல் டெக்னாலஜிஸ் மற்றும் கன்சல்டிங் சர்வீசஸ் நிறுவனத்தை மூடுவதற்கு கத்தார் அரசு உத்தரவிட்டது. அந்நிறுவனத்தில் பணியாற்றிய இந்திய கடற்படையின் முன்னாள் வீரர்கள் பலரும் கத்தாரை விட்டு வெளியேறும் படியும் அறிவுறுத்தப்பட்டனர். அப்போது 8 இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள், கத்தார் அரசால் கைது செய்யப்பட்டனர்.
இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக குற்றச்சாட்டு: கத்தார் அரசால் கைது செய்யப்பட்ட 8 பேரும், இஸ்ரேலுக்கு உளவு பார்த்தனர் என்பது குற்றச்சாட்டு. இந்த 8 பேரில் 3 பேர் இந்திய கடற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்ற கேப்டன்கள். 4 பேர் கமாண்டர்கள்; ஒருவர் மட்டும் கடற்படை மாலுமி. இவர்கள் கத்தார் சிறைகளில் தனிமைப்படுத்தப்பட்டு பெரும் துயரை அனுபவித்து வந்தனர்.
8 பேருக்கு தூக்கு தண்டனை: இந்நிலையில் இந்த 8 பேருக்கும் கத்தார் நீதிமன்றம் திடீரென தூக்கு தண்டனை விதித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.
இந்தியர்களுக்கு எதிராக சதி?: இதனிடையே கத்தாரில் இந்திய கடற்படையினர் பெருமளவில் பணியாற்றுவதை விரும்பாத சில சக்திகள்தான் திட்டமிட்டே இந்திய கடற்படை முன்னாள் வீரர்களை இப்படியான தேசதுரோக- உளவு வழக்கில் சிக்க வைத்துள்ளதாகவும் வெளியுறவுத் துறை வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த விவகாரத்தை சுமூகமாக முடிவுக்கு கொண்டு வர பல்வேறு தரப்புகளிலும் மத்திய அரசு தீவிரமாக முயற்சித்து வருவதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications