இன்று சென்னையில் செஸ் ஒலிம்பியாட்.. நேற்று லோக்சபாவில் நிறைவேறிய முக்கிய மசோதா -2க்கும் என்ன லிங்க்?
டெல்லி: இன்று சென்னையில் செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்க இருக்கும் நிலையில், நேற்று நாடாளுமன்ற மக்களவையில் விளையாட்டு தொடர்பான முக்கிய மசோதா நிறைவேற்றப்பட்டு உள்ளது.
44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் தொடங்க இருக்கிறது. ஆகஸ்டு 10 ஆம் தேதி வரை செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது. 186 நாடுகளை சேர்ந்த 2,000-க்கும் அதிகமான செஸ் வீரர்கள் இதில் கலந்துக்கொள்ள உள்ளனர். பலர் ஏற்கனவே சென்னைக்கு வருகை தந்து இருக்கின்றனர்.
போட்டி நடைபெறும் மாமல்லபுரத்தில் அதற்கான ஏற்பாடுகள் முழுமையாக நடந்து முடிந்துள்ளன. நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். இதனை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை சென்னை வர உள்ளார்.

சிறப்பான ஏற்பாடுகள்
தமிழ்நாடு அரசு தரப்பில் பிரதமர் மோடியின் வருகை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மாலை சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் இந்த போட்டி தொடங்கி வைக்கப்படுகிறது. இந்த போட்டிக்கு வரும் சிறப்பு விருந்தினர்கள், விளையாட்டு வீரர்கள், பார்வையாளர்கள் என அனைத்து தரப்பினருக்குமான சிறப்பான ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு செய்து இருக்கிறது.

நாடாளுமன்ற கூட்டத்தொடர்
இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் மழைகால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சிகளின் அமளிகளுக்கு மத்தியில் மத்திய அரசு பல்வேறு புதிய மசோதாக்களையும், சட்டத்திருத்தங்களையும் விவாதத்துக்கு கொண்டு வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் நேற்று தேசிய ஊக்க மருந்து தடை மசோதாவை மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் கொண்டு வந்தார்.

தேசிய ஊக்க மருந்து தடை மசோதா
இதனை தாக்கல் செய்து பேசிய அவர், "இந்தியாவில் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு ஊக்க மருந்து சோதனை ஆய்வகங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது முக்கியம். அதற்கு இந்த மசோதா உதவும். இதன் மூலம் தேசிய ஊக்க மருந்து தடை முகமை மற்றும் தேசிய ஊக்க மருந்து பரிசோதனை ஆய்வகம் போன்றவற்றின் செயல்பாடுகளுக்கு சட்ட வடிவம் கிடைக்கும். இதன் வாயிலாக விளையாட்டில் ஊக்க மருந்துகள் பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் தேசிய ஊக்க மருந்து தடை வாரியத்தை உருவாக்க முடியும்.

நிறைவேறிய மசோதா
விளையாட்டுக்களை ஊக்குவிப்பதற்கும் விளையாட்டு வீரர்களின் நலனை பாதுகாப்பதற்கு இந்த மசோதா உதவும். இதன் வாயிலாக நாட்டில் ஊக்க மருந்து ஆய்வு வசதிகள் மேம்படும். மேலும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கும் ஊக்க மருந்து சோதனை ஆய்வகங்களை அதிகரிக்க வேண்டும்." என்றார். இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலமாக மக்களவையில் நிறைவேறியது.












Click it and Unblock the Notifications